எங்க கட்சி எம்.எல்.ஏக்களை பாஜக கடத்திவிட்டது.. உச்சநீதிமன்றத்தில் ம.பி. காங்கிரஸ் புதிய மனு தாக்கல்
டெல்லி: தங்களது கட்சி எம்.எல்.ஏக்களை பாரதிய ஜனதா கட்சி கடத்தி வைத்துள்ளதாகவும் அவர்களை உடனே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத், சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் கடத்தப்பட்டு கர்நாடகாவில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விடுவித்தால் மட்டுமே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் என்கிறார் முதல்வர் கமல்நாத்.
இந்நிலையில் நேற்று மத்திய பிரதேச சட்டசபை கூடிய போதும் கொரோனா அச்சத்தால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனால் முதல்வர் கமல்நாத் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை.
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட், ஹேமந்த் குப்தா பெஞ்ச் இவ்வழக்கை விசாரித்தது. பின்னர், முதல்வர் கமல்நாத் தரப்பு 24 மணிநேரத்துக்குள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இவ்வழக்கில் நாளை காலை விசாரணை நடைபெற உள்ளது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் சார்பில் ஒரு புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தங்களது கட்சியின் 16 எம்.எல்.ஏக்களை பாஜக கடத்தி வைத்துள்ளது; அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.