ராமர் கோவிலை கையில் எடுத்த பாஜக.. இந்துக்களின் வாக்குகளுக்கு குறி.. சிறுபான்மையினரை நழுவ விடுமா
Recommended Video
டெல்லி: திரும்பவும் ராமர் கோயில் என்ற அஸ்திரத்தை தேர்தல் அறிக்கையின் மூலம் கையில் எடுத்துள்ளது பாஜக!
கிட்டத்தட்ட எல்லா கட்சிகளுமே தங்களது தேர்தல் அறிக்கையினை வெளியிட்டு விட்டன. ஆனால் பாஜக மட்டும் வேண்டுமென்றே காலங்கழித்து இன்று வெளியிட்டுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் தேர்தல்அறிக்கையினை வெளியிட்டதுடன், அதில் மதவாத நெடியை புகுத்தியுள்ளது. குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனைத்து வகையிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது அதில் முக்கியமானது.
தேர்தல் அஸ்திரம்
போனமுறை தேர்தலின்போதும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக அளித்தது. ஆனால் செய்யவில்லை.. இப்போது அதேபோல ஆட்சி நிறைவடையும்போது திரும்பவும் ராமர் கோயில் கட்டுவோம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதை தேர்தல் அஸ்திரமாக மட்டுமே பாஜக பார்க்கிறது என்பது தெளிவாகிறது.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லா கடன் வழங்கப்படும்- பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி
கும்பமேளா
ஏற்கனவே அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதுவரை எந்த முடிவு எடுப்பது என்று தெரியாமல் மத்திய அரசும் மௌனம் காத்து நிற்கிறது. மேலும் அப்பீலுக்கு இதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பேயே அதை இந்துத்துவா அமைப்புகள் தூக்கி தூரப்போட்டுவிட்டு, ராமர் கோயிலை நாங்களே கட்டுவோம் என்று ஒரு முடிவையும் கும்பமேளாவில் கூடி முடிவெடுத்தார்கள். இதனை இப்போது தங்களது பாஜக அறிக்கையிலேயே முதன்மைப்படுத்தி கொண்டு வந்தும் விட்டார்கள்.
சுப்ரீம் கோர்ட்
ராமர் கோயில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் பாஜக இதை தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. இதன் மூலம் மக்களிடையே குழப்பம் ஏற்படும் சூழல் உள்ளது. இதை தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்த முனைகிறதா என்ற கேள்வி எழுகிறது.
மதவாதம்
கடந்த 5 வருடங்களாக எங்கள் மீது ஒரு ஊழல் குற்றச்சாட்டும் இல்லை என்று அமித்ஷா சொன்னாலும், இந்த 5 வருடத்தில் வெற்றிகரமான செயல்பாடுகளை பாஜக செய்யவில்லை என்பதே உண்மை. அதேபோல ராகுல்காந்தியின் வளர்ந்து வரும் செல்வாக்கை கட்டுப்படுத்தவும் வேறு வழியில்லாததால், மதவாத பிளவை கையில் எடுத்துள்ளது பாஜக. அதனால்தான் இந்துக்களின் வாக்கு வங்கியை வலிமையாக்க ராமர்கோயில் கட்டுவதை ஒரு மிகப்பெரிய விஷயமாக அறிவித்துள்ளது.
சிறுபான்மையினர்
ராமர் கோயில் கட்டுவோம் என்ற அறிவிப்பின் மூலம் மக்களை திசைதிருப்பி வாக்குகளை அள்ள நினைத்தாலும், இதையே தங்களுக்கு சாதகமாக திருப்பி சிறுபான்மையினர் ஓட்டுக்களை எதிர்க்கட்சிகள் அள்ள நினைப்பார்கள் என்பதையும் பாஜக மறந்துவிடக்கூடாது!