டெல்லி பேரவை தேர்தல்.. லோக்சபா தேர்தலில் கிடைத்த வாக்கு வங்கியை தக்க வைக்க பாஜக வியூகம்
டெல்லி: அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தல்களில், 55 சதவீத வாக்குகளை பெற தீவிர வியூகம் வகுக்கப்பட்டு வருவதாக பாஜக கூறியுள்ளது.
நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் டெல்லியில் அபார வெற்றி பெற்றது பாஜக ஆம். ஆத்மி 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போது டெல்லியில் அடுத்த பிப்வரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக அமைப்பு பொதுச்செயலாளரான சித்தார்த்தன், பேரவை தேர்தலுக்கு எந்த மாதிரியான அரசியல் பிரச்சனைகளை மக்கள் முன் கொண்டு செல்வது, மேலும் யாரை வேட்பாளர்களாக தேர்வு செய்வது உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக கூறினார்.
டெல்லியில் உள்ள மூன்று மாநகராட்சிகளிலும் பாஜக உறுதியான தடம் பதித்துள்ளது. அதோடு மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளிலும், வெற்றிக்கொடி நாட்டுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே சட்டப்பேரவை தேர்தலை குறி வைத்து பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட மாநிலங்களோடு சேர்த்து டெல்லிக்கும் முன்கூட்டியே தேர்தலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. எனவே தான் தற்போது டெல்லி பேரவை தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்றார் சித்தார்த்தன்.
20 ஆண்டுகளாக தலைநகர் டெல்லியை பறிகொடுத்துள்ளோம். தற்போது எப்படியும் வெற்றி பெற்றே தீருவது என்ற உத்வேகத்துடன் களமிறங்க உள்ளோம். அதற்காக மோடி மந்திரத்தால் வெற்றி கிட்டும் என நாங்கள் கோட்டை கட்டவில்லை. ஆம் ஆத்மி மற்றும் கெஜ்ரிவாலின் செல்வாக்கு முன்பை விட சரிந்துள்ளது. இது பாஜகவின் வியூகங்களுக்கு பலம் சேர்க்கும் என்றார்.
டெல்லியில் மக்களவை தேர்தலில்பாஜகவிற்கு மொத்தம் 55 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த வாக்கு சதவீதத்தை அப்படியே சட்டப்பேரவை தேர்தலிலும் பெற்று விட வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளோம்.
இதற்கான கள ஆய்வுகள் விரைவில் நடத்தப்பட உள்ளது. தற்போதுள்ள முக்கிய பிரச்சனை ஆம் ஆத்மி அரசு மற்றும் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்வது, வேட்பாளர் தேர்வுக்காக பாஜக தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு என பல நிலைகளில் இந்த கள ஆய்வை றே்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
டெல்லியை பொறுத்த வரை 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி கூடவே 55 சதவீத வாக்கு என்பதே எங்களது இலக்கு என்றார்.