முத்தலாக் மூலமாக முஸ்லீம்கள் வீட்டுக்குள் ஏன் வர்ரீங்க.. பாஜகவை போட்டு தாக்கிய மெகபூபா முப்தி
டெல்லி: முத்தலாக் தடை மசோதாவின் மூலம் முஸ்லிம்களின் குடும்பத்திற்குள் பாஜக நுழைவதாக காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி பகீர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
முத்தலாக் தடைச் சட்ட மசோதா கடந்த வியாழக்கிழமை லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன. அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட வேண்டிய அந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் இன்னும் தாக்கலாக வில்லை. இந்நிலையில் இந்த மசோதாவிற்கு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: திருமண வாழ்வில் பிரச்சனை ஏற்பட்டால், இந்த சமூகத்தில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். முத்தலாக் தடைச் சட்ட மசோதாவின் மூலம் பாஜக எங்களது குடும்பங்களில் நுழைகிறது. அதனால் எங்கள் குடும்ப வாழ்க்கை பாதிப்படைவது மட்டுமின்றி, பொருளாதார ரீதியாக பிரச்சனைகளும் ஏற்படும்.
எங்கள் தரப்பு ஆண்கள் மற்றும் பெண்களின் பொருளாதார நிலையும் மிகவும் பாதிக்கப்படும். திருமண உறவில் பாதிப்பு ஏற்பட்டால் பெண்களின் வாழ்க்கையில் அது எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியும் என்று மெகபூபா முப்தி கூறியுள்ளார்.