மாநில அரசுகளை கவிழ்க்க பணத்தை வாரி இறைக்கிறது பாஜக: ராகுல் காந்தி கோபம்
டெல்லி: பாஜக பணத்தைப் பயன்படுத்தி மாநில அரசுகளை வீழ்த்தி வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசியல் கொந்தளிப்பு குறித்து ராகுல் காந்தி கூறுகையில், "பல மாநிலங்களில் அரசுகளை வீழ்த்த பாஜக பணத்தை பயன்படுத்துகிறது. இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதைச் செய்து வருகிறார்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் நாம் அதை பார்த்தோம் " என தெரிவித்துள்ளார் அவர்.
கர்நாடகாவில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக தலைமை ரூ.1000 கோடியை வாரி இறைத்துள்ளதாக சில கன்னட டிவி சேனல்களில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு கூறியுள்ளார்.
திடீரென மாறும் அரசியல் வானிலை.. ஆளும் கட்சியினர் குஷி.. எரிச்சலில் எடியூரப்பா.. என்ன நடக்கிறது?
கோவா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், பாஜகவை குற்றம் சாட்டும் காங்கிரஸ் தலைமை, நேற்று நாடாளுமன்றம் வெளியே போராட்டம் நடத்தியிருந்தது. அதில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
பாஜகவுக்கு, திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.