பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு.. முரளி மனோகர் ஜோஷி மிகுந்த உற்சாகம்.. வெளிப்படுத்திய கருத்து
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து லக்னோ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்பை பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வரவேற்றுள்ளார்.
1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் இருந்து பாபர் மசூதி இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.
(படம்: பாபர் மசூதி இடிந்த்து தரைமட்டமாக்கப்பட்ட தருணத்தில் சம்பவ இடத்தில் முரளி மனோகர் ஜோஷி முதுகில் ஏறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உமாபாரதி)
இந்நிலையில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்ந்து லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, சிவசேனா தலைவர் பால்தாக்கரே, அசோக் சிங்கால் உள்பட 49 பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பால்தாக்கரே , அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், டால்மியா உள்பட 17 பேர் இறந்துவிட்டனர். இதனால் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வாதங்கள் நடந்து முடிந்தது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம்,. குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இதனால் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 32 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பை பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்று முடிவு. அயோத்தியில் டிசம்பர் 6 சம்பவத்தில் எந்த சதி திட்டமும செய்யப்படவில்லை என்பதை இது நிரூபிக்கிறது. எங்கள் திட்டமும் பேரணிகளும் எந்த ஒரு சதித்திட்டத்தின் ஒரு பகுதி அல்ல. இந்த தீர்ப்பால். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இனி ராமர் கோயில் கட்டுமானத்தைப் பற்றி அனைவரும் உற்சாகமாக இருக்க வேண்டும்" என்றார்.