பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா உறுதி.. நள்ளிரவில் ட்விட்டரில் அறிவிப்பு
டெல்லி: பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் அவரே நள்ளிரவில் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை நெருங்குகிறது. பொது பணியில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், எம்பிக்கள், மாவட்ட நிர்வாகத்தினர் என ஒருவரையும் விட்டு வைக்காமல் கொரோனா தொற்றிக் கொள்கிறது.
இந்த நிலையில் மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அண்மையில் இறந்தார். அது போல் கன்னியாகுமரி எம்பி வசந்தகுமாரும் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனும் கொரோனா தொற்றால் காலமாகிவிட்டனர்.
இந்த சூழலில் பாஜக மூத்த தலைவர் உமா பாரதிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நள்ளிரவில் வெளியிட்ட பதிவில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியும் கடந்த 3 தினங்களாக எனக்கு காய்ச்சல் இருந்தது.
இதையடுத்து கொரோனா சோதனை மேற்கொண்டதில் எனக்கு நோய் தொற்று இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன. எனவே நான் இப்போது ஹரீத்வாருக்கும் ரிஷிகேஷுக்கும் இடையே உள்ள வந்தே மாதரம் கஞ்ச்சில் உள்ள இடத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன்.
4 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை எடுப்பேன். ஒரு வேளை அப்போதும் கொரோனா தொற்று அப்படியே இருந்தால் மருத்துவர்களை அணுகுவேன். அண்மையில் என்னை நேரில் வந்து பார்த்தவர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு உமா பாரதி அறிவுறுத்தியுள்ளார்.