பொறுப்பேற்றதில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கும் வானதி.. வாஞ்சையுடன் வரவேற்கும் பாஜக மகளிரணியினர்..!
டெல்லி: பாஜக மகளிரணித் தலைவராக பொறுப்பேற்றது முதல் மாநிலம் வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் வானதி சீனிவாசன்.
டெல்லி, பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் என பல்வேறு மாநிலங்களுக்கும் வரிசையாக டூர் அடிக்கும் அவரை அங்குள்ள மகளிரணி நிர்வாகிகள் வாஞ்சையுடன் வரவேற்று கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைக்கின்றனர்.
அந்த வகையில் நேற்று மேற்கு வங்கம் மாநிலத்துக்கு சென்ற வானதி சீனிவாசனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் முண்டாசு கவிஞர் பாரதியாரின் சிலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாஜக மகளிரணி
தமிழக பாஜக துணைத் தலைவராக இருந்த வானதி சீனிவாசனுக்கு கடந்த அக்டோபரில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவராக புரோமோஷன் கிடைத்தது. இதையடுத்து முறைப்படி டெல்லியில் உள்ள பாஜக அகில இந்திய தலைமையகத்துக்கு சென்று பொறுப்பேற்றுக்கொண்ட அவர் அதன் பின்னர் தொடர்ந்து சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு வருகிறார்.
ஒடிஸா மாநிலம்
அனைத்து மாநிலங்களிலும் பாஜக மகளிரணிக்கு வலிமையான கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டத்துடன் அவர் இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளார். ஒடிஸாவில் அவர் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வரவேற்பு இருந்ததைக் கண்டு அசந்து போனார். இதுமட்டும் அல்லாமல் 5 நாள் பாதயாத்திரை நிகழ்ச்சியிலும் ஒடிஸாவில் கலந்துகொண்டார்.
மேற்கு வங்கம்
தமிழகத்துடன் மேற்கு வங்கத்துக்கும் வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதால் அங்கு சற்று கூடுதல் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார் வானதி. திரிணாமூல் காங்கிரசுக்கு எதிராக பாஜக மகளிரணியினரை படை திரட்டுவதற்காக அங்கு முகாமிட்டுள்ள அவர் கொல்கத்தாவில் உள்ள மகாகவி பாரதியாரின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியிருக்கிறார்.
அஸ்ஸாம் -கேரளா
இதேபோல் அடுத்தக்கட்டமாக அஸ்ஸாம், கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து அங்கு பாஜக மகளிரணிக்கு பலமான கட்டமைப்பை உருவாக்க உள்ளார். இதனிடையே தனது செயல்பாடுகள் குறித்த அறிக்கையையும் அவ்வப்போது கட்சியின் மேலிடத்துக்கு அவர் கொண்டு செல்கிறார்.