கூடுதலாக 200 கேந்திர வித்யாலயா பள்ளிகள்.. பாஜகவின் கல்வி வாக்குறுதி
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி கல்வி தொடர்பான வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதியில் கேந்திர வித்யாலாயா மாதிரியான 200 பள்ளிகள் 2024ம் ஆண்டுக்குள் திறக்கப்படும், உலகத்தரத்தில் கல்வி என தெரிவித்துள்ளது.
'பாஜக சங்கல்ப் பத்ரா 2019' என்ற பெயரில் மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த இந்த விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். இதேபோல் நாட்டுக்கு என்னவெல்லாம் செய்தோம், செய்யப்போகிறோம் என்பதை பிரதமர் மோடியும் பேசினார். இதேபோல் பாஜக தலைவர் அமித்ஷா,மத்திய நிதிமைச்சர் அருண்ஜெட்லி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ், உள்பட பலரும் பேசினார்கள்.
கல்விக்கடன் பற்றி பேச மாட்டோம்.. நீட் குறித்து வாய் திறக்க மாட்டோம்.. கல்வியை கண்டுகொள்ளாத பாஜக!
பாஜக விவசாயிகளுக்கு, மாணவர்களுக்கு, ஏழைகளுக்கு என பல அறிவிப்புகளை பட்டியல் போட்டு வெளியிட்டுள்ளது. இதில் கல்விக்கு பாஜக எந்த மாதிரியான விஷயங்களை செய்யப்போவதாக அறிவித்துள்ளது என்பதை பார்க்கலாம்.
உலகின் தலைசிறந்த 500 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களை இடம் பெற வைப்பதற்கு நாங்கள் (பாஜக) ஊக்குவிப்போம்.
2024ம் ஆண்டுக்குள் மருத்துவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும்.
நாடு முழுவதும் கூடுதலாக 200 கேந்த்ரா வித்யாலயா பள்ளிகள் 2024ம் ஆண்டுக்குள் துவங்கப்படும்.
'வெளிநாட்டு பல்கலைக்கழக கொள்கை' தொடர்பாக சட்ட முன்வடிவை கொண்டு வருவோம். இதன் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் நிறுவப்படும். மேலும் புதிய வெளிநாட்டு கொள்கையின் மூலம் கல்வி ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம் நட்பு நாடுகளுடன் உள்ள உறவு மேம்படுத்தப்படும். இவ்வாறு பாஜகவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.,