ராஜ்யசபாவில் டிச. 31ல் முத்தலாக் மசோதா தாக்கல்.. நிறைவேற்ற விடமாட்டோம்.. காங். உறுதி
டெல்லி: ராஜ்யசபாவில் டிசம்பர் 31ம் தேதி, முத்தலாக் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றவிடமாட்டோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.
இஸ்லாமிய ஆண்கள், மூன்று முறை தலாக் கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறை முத்தலாக் எனப்படுகிறது. இந்த நடைமுறைக்கு தடை விதித்தும், மீறி முத்தலாக் செய்யும் ஆண்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கவும் வகை செய்யும் சட்ட மசோதா, நேற்று முன்தினம், லோக்சபாவில் நிறைவேறியது.
காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன. இந்த நிலையில், ராஜ்யசபாவில், வரும் 31ம் தேதி, இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் இந்த சட்டத்தை எதிர்ப்போம் என்று, அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். சட்டத்தை இப்போதுள்ள வடிவத்தில் நிறைவேற்ற விடமாட்டோம் என அவர் கூறினார்.
ராஜ்யசபாவில் இந்த மசோதாவை நிறைவேற்ற தேவையான பலம், பாஜக கூட்டணியிடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.