டெல்லியில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகளே இல்லை.. பாஜக எம்.பி.யின் பேச்சால் வெடித்தது சர்ச்சை..!
டெல்லி: டெல்லி எல்லையில் போராட்டம் நடத்துபவர்கள் விவசாயிகளே இல்லை எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் பாஜக எம்.பி. அக்ஷய்வர் லால்.
மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாதங்களாக தொடரும் இந்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு பல வழிகளில் முயன்றும் ஒன்று கூட கைகொடுக்கவில்லை.
புதிய வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்வதாக மத்திய அரசு கூறியும், அதனை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம், டெல்லி, மாநில விவசாயிகள் அதிகளவில் பங்கேற்றுள்ளனர்.
வெயில், மழை, இரவு பகல் பாராமல் போராட்டம் நடந்து வரும் சூழலில், டெல்லி எல்லையில் போராடுபவர்கள் உண்மையான விவசாயிகளே அல்ல என கூறியுள்ளார் பாஜக எம்.பி.அக்ஷய்வர் லால். இவர் உத்திரப்பிரதேசம் மாநிலம் பஹரிட்ச் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
மேலும், விவசாய சங்கத் தலைவர் என்று கூறிக்கொள்ளும் ராகேஷ் திகாயத் கொள்ளைக் கூட்டத்திற்கு தலைவன் என்றும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்களே போராட்டம் நடத்தி வருவதாகவும் அக்ஷய்வர் லால் விமர்சித்துள்ளார். கனடா உள்ளிட்ட இன்னும் பல வெளிநாடுகளில் இருந்து போராட்டத்திற்கான பணம் வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் உண்மையான விவசாயிகள் போராட்டம் நடத்தியிருந்தால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார். தற்போது தட்டுப்பாடின்றி விவசாயிகளிடம் இருந்து பால், காய்கறி, பழங்கள், உள்ளிட்ட பொருட்கள் சந்தைக்கு சென்று கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் நாக்பூரில் மீட்பு!
இதனிடையே எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக, ஏற்கனவே மத்திய அரசு மீதான கோபத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பாஜக எம்.பி. அக்ஷய்வர் லால் கருத்தால் மேலும் கொந்தளித்துள்ளனர். விவசாயிகளான தங்களையும், உரிமைக்கான போராட்டத்தையும் பாஜக எம்.பி. கொச்சைப்படுத்தி விட்டதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.