இப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்
Recommended Video
டெல்லி: லோக்சபாவில் இன்று அதிமுக அரசை தாக்கிப் பேசிய திமுக எம்பி தயாநிதிமாறனுக்கு எதிராக பாஜக எம்பிக்கள் அணி திரண்டனர்.
குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, பல்வேறு உறுப்பினர்களும் லோக்சபாவில் பேசி வருகின்றனர். இன்று திமுக எம்பி தயாநிதி மாறனுக்கு பேசுவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.
அப்போது உரையாற்றிய தயாநிதி மாறன், பெரும்பான்மை பலத்துடன் பாஜக அரசு மீண்டும் பதவியேற்றுள்ளதற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒருவேளை இந்தியா எங்களது தலைவர் அண்ணா வழித் தடத்தை பின்பற்றி இருந்தால், இப்போது நிலைமை வேறுமாதிரி மாறி இருக்கும்.
திமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்க
குடிநீர் பிரச்சினை
பாஜகவின் பலம் என்பது அவர்களிடம் இருந்து வரவில்லை. எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதுதான் அவர்களுக்கு சாதகம். எப்போதுமே ஆளும் கட்சி என்பது பணிவோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அண்ணா சொல்வார். அதை மனதில் நிலை நிறுத்துங்கள். சென்னையில் கடுமையான குடிநீர் பஞ்சம் தலைவிரித்து ஆடி வருகிறது. ஆண்டு இதே போன்ற தண்ணீர் பஞ்சம் ஏற்பட்ட போது, 2004ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி வந்தபோது, கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டுவந்தோம். 2006ல் முதல்வராக இருந்த கருணாநிதி இதேபோன்று மற்றொரு திட்டத்தை கொண்டு வந்தார்.
ஊழல் குற்றச்சாட்டு
இப்போதைய தமிழக அரசு குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. ஊழல் ஆட்சி நடத்துவதில் தான் அவர்கள் குறிக்கோளாக உள்ளனர். இவ்வாறு தயாநிதிமாறன் கூறியபோது பாஜக எம்பி நிஷிகாந்த், எழுந்து, தயாநிதி மாறன் பேசியதில், பாயிண்ட் ஆஃப் ஆர்டர் இருப்பதாக கூறினார். அவர் கூறுகையில், அதிமுக அரசை, ஊழல் அரசு என்று நாடாளுமன்றத்தில் தயாநிதிமாறன் கூறிய கருத்து விதிமுறைகளுக்கு புறம்பானது. மாநில சட்டசபை தொடர்பாக லோக்சபாவில் பேசுவது விதிமுறை இல்லை. என்று தெரிவித்தார்.
ஊழலை ஒழிப்பதாக சொன்னீர்களே
ஆனால் அசரவில்லை தயாநிதி மாறன். அவர் கூறுகையில், குடியரசுத் தலைவர் தனது உரையில் ஊழலை ஒழிப்பது இந்த அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார். எனவே உங்கள் கூட்டணியில் உள்ள அதிமுக அரசு பற்றி தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று பதிலளித்தார்.
அடிமைகள்
பாஜக எம்பி ராஜீவ் பிரதாப் ரூடி மற்றொரு, பாயிண்ட் ஆஃப் ஆர்டர் பிரச்சினையை எழுப்பினார். குடியரசுத் தலைவர் உரையில் தமிழ்நாடு என்ற விஷயம் இடம் பெறவே இல்லை. எனவே தயாநிதிமாறன் அதுபற்றி பேச கூடாது என்றார். இதற்கு பதிலடி கொடுத்த தயாநிதிமாறன், அடிமைகளை பாதுகாக்க வேண்டியது உரிமையாளரின் கடமை என்பதை நான் அறிவேன் என்றார். இதையடுத்து மத்திய இணையமைச்சர் அர்ஜுன் மேக்வால், எழுந்து, 'அடிமை' என்ற வார்த்தையை தயாநிதிமாறன் குறிப்பிட்டதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.
புகுத்துகிறீர்கள்
இதன் பிறகு பேச்சை தொடர்ந்த தயாநிதி மாறன், பாஜகவுக்கு தமிழ்நாடு வாக்களிக்கவில்லையே ஏன் என்பதை நீங்கள் சீர்தூக்கிப் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எல்லாவற்றையும் தமிழகம் மீது புகுத்துவதுதான் காரணம். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என்று மத்திய அரசு கூறியிருந்தாலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தாலும், கர்நாடக அரசுக்கு மத்திய அரசு துணை போகிறது. மத்திய அரசில் அமைச்சராக உள்ள சதானந்த கவுடா ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக, அதாவது, கர்நாடகா அணை கட்டுவதற்கு ஆதரவு அளித்து வருகிறார். இவ்வாறு, தயாநிதிமாறன் பேசினார். அப்போது பாஜக எம்பிக்கள் மற்றும் கர்நாடக எம்பிக்களும் குறுக்கிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.