பாஜக பெரிதும் நம்பிய நகர்ப்புறங்களும் கைவிட்டன.. லோக்சபா தேர்தலில் காத்திருக்கும் அடி.. இதை பாருங்க
Recommended Video
டெல்லி: ராஜஸஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கரில் பாஜக பெற்ற தோல்வி, லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் பிரனாய்ராய். வெறும் கணிப்பாக இல்லாமல், பல புள்ளி விவரங்களை இந்த வாதத்திற்கு பலம் சேர்க்க அவர் பயன்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜக, காங்கிரசிடம் ஆட்சியை இழந்துள்ளது. இன்னும் ஆறு மாதங்களுக்குள் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் அரங்கத்தில் சூட்டை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் பிரனாய் ராய் கூறும் ஆய்வு தகவல்கள் சுவாரசியமானவை. பாஜகவிற்கு எச்சரிக்கை மணியடிப்பவை. அதுகுறித்த ஒரு பார்வை இதோ:
மாற்றம் ஒன்றே மாறாதது
கடந்த ஓராண்டுக்கு முன்பாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலங்களில் பாஜகவை தோற்கடித்து, காங்கிரஸ் வெல்லும் என யாராவது கூறியிருந்தால், அனைவரும் சிரித்திருப்பார்கள். ஆனால் ஓராண்டுக்குள் மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் 21 தொகுதிகளில் 1000த்திற்கும் குறைவான வாக்குகளில் பாஜக தோற்றுள்ளது. மத்திய பிரதேசத்தில், 54 சதவீதம் நகர்ப்புற தொகுதிகள் பாஜகவிற்கு பறிபோயுள்ளது.
[2014 போல இருக்காது 2019.. பாஜக ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தாக வேண்டும்! ]
நகரங்கள்
ராஜஸ்தானில் 41 சதவீத நகர்ப்புற தொகுதிகளை இழந்துள்ளது பாஜக. ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நகர்ப்புற மக்களை கோபப்படுத்தியுள்ளது என்பதற்கு இது சான்று. வணிகர்கள் மத்தியில் பணமதிப்பிழப்பு இன்னும் கடும் கொந்தளிப்பை தக்க வைத்துள்ளது. அதேநேரம், பழங்குடியினர் மத்தியிலும், பாஜகவிற்கு முன் எப்போதும் இல்லாத அடி விழுந்துள்ளது.
பழங்குடியினர்
ராஜஸ்தானில் 41 சதவீத பழங்குடியின தொகுதிகளை பாஜக பறி கொடுத்துள்ளது. சட்டீஸ்கரில் 35 சதவீதம் பறிபோயுள்ளது. மபியில் 24 சதவீத தொகுதிகள் காங்கிரஸ் பக்கம் போயுள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜக 3 சதவீதம் இழப்பையும், காங்கிரஸ் 5 சதவீத லாபத்தையும் பெற்றுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இவ்வாண்டு நடைபெற்ற மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலிலும், பாஜக 3 சதவீத இழப்பை சந்தித்தது. காங்கிரஸ் 5 சதவீதம் கூடுதல் வாக்குகளை பெற்றது.
இடைத் தேர்தல்
சட்டசபை தேர்தலில், ராஜஸ்தானில் காங்கிரஸ் 7 சதவீதம் அதிக வாக்குகளை ஈர்த்துள்ளது. பாஜக அதே அளவுக்கு இழந்துள்ளது. இவ்வாண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில், காங்கிரஸ் பாஜகவை தோல்வியடையச் செய்தது. அந்த தேர்தலிலும் காங்கிரஸ் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றது.
2017-18ளில் ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலிலும், பாஜகவை காங்கிரஸ் வீழ்த்தியிருந்தது. இவற்றின் மூலம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், தேர்தல் கருத்து கணிப்புகளை மட்டுமே கட்சிகள் நம்புவது வீண். இதுபோல மக்கள் மனதை பிரதிபலிக்கும் உள்ளாட்சி தேர்தல்கள், இடைத் தேர்தல்கள் முடிவுகளையும் அரசியல் கட்சிகள் கவனிக்க வேண்டும்.
லோக்சபா தேர்தல்
2014 லோக்சபா தேர்தலில், ராஜஸ்தானில் 25 தொகுதிகளையும் பாஜக வென்றது. ஆனால் டிரெண்ட்டை வைத்து பார்த்தால், 2019 லோக்சபா தேர்தலில் 8 தொகுதிகளை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. அப்படியானால், 17 சீட்டுகள் இழக்க வாய்ப்புள்ளது. ம.பி.யில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக 27 தொகுதிகள் வென்றது. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலில், 10 தொகுதிகளை மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளது. சட்டீஸ்கரில் கடந்த முறை 10 தொகுதிகளையும் பாஜக வென்றது. அடுத்த ஆண்டு ஒரு தொகுதியையும் வெல்ல வாய்ப்பில்லை.
பெரிய அடி
ஹிந்தி பேசும் மக்களின் இந்திய நிலப்பரப்பின், இதயபகுதியான மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தானில் மொத்தம் 62 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதில் பாஜக 18 லோக்சபா தொகுதிகளைத்தான் வெல்லப்போகிறது. இழப்பு 44 தொகுதிகள். எனவே லோக்சபா தேர்தலில் இம்மாநிலங்கள் பாஜகவிற்கு பெரிய அடியை கொடுக்கப்போகின்றன. இந்த டிரெண்ட்டை பார்த்து மத்திய அரசு ஏதாவது 'சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்' செய்யக்கூடும். ஆனால், இனி எது செய்தாலும் தேர்தலுக்காக செய்வதாகத்தான் மக்கள் நினைப்பார்கள்.
ஜாதி வாக்குகளும் போச்சு
ராஜஸ்தானில், ஜாட்டுகள் வாக்குகள் பாஜகவைவிட்டு போய்விட்டன. வாஜ்பாய் அரசில்தான் ஜாட் ஜாதிக்கு, ஓபிசி அந்தஸ்து கொடுத்து, இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. எனவே அவர்கள் எப்போதுமே பாஜக ஆதரவாளர்களாக இருந்தனர். ஆனால்ராஜஸ்தானில், ஜாட் பெரும்பான்மை பகுதிகளில் 58 சதவீதம் தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. குஜ்ஜார் இனத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 61 சதவீதம் சீட்டுகளை இழந்துள்ளது. இவ்வாறு கூறுகிறது அந்த புள்ளி விவரம்.