மகா., ஹரியானாவில் முதல்வர் வேட்பாளர்களை மாற்றாத பாஜக- சிறுபான்மை ஜாதிக்கே வாய்ப்பு!
டெல்லி: மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சிறுபான்மை ஜாதிகளைச் சேர்ந்தவர்களையே மீண்டும் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தியிருக்கிறது பாஜக.
மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைகளுக்கு அக்டோபர் 21-ந் தேதி தேர்தல் நடைபெறும். இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 24-ந் தேதி எண்ணப்படும்.
மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனான தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹரியானாவைப் பொறுத்தவரையில் எதிர்க்கட்சிகள் அத்தனையும் சிதறிப் போயிருக்கின்றன.
எல்லா தேவைக்கும் இனி ஒரே அடையாள அட்டைதான்.. சென்சஸ் எடுக்கும் செல்போன் ஆப்.. அமித் ஷா அதிரடி
மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னவிஸ் மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். அம்மாநிலத்தில் 10% மட்டுமே உள்ள பிராமணர் ஜாதியைச் சேர்ந்தவர் பட்னவிஸ். 33% உள்ள மராத்தா ஜாதியினரே மகாராஷ்டிராவில் பெரும்பான்மையினர்.
ஆனாலும் பிராமணரான பட்னவிஸை முதல்வராக்கியது பாஜக. மராத்தா ஜாதியினர் இடஒதுக்கீடு கோரி போராடிய போது 16% இடஒதுக்கீடு வழங்கினார் பட்னவிஸ். இதன்மூலம் பெரும்பான்மை ஜாதியினரின் ஆதரவையும் பெற்றார் அவர்.
அதேபோல் ஹரியானாவில் முதல்வர் கட்டார் பஞ்சாபி ஜாதியைச் சேர்ந்தவர். அம்மாநிலத்தில் ஜாட்தான் மிகப் பெரும்பான்மையினர். ஜாட் ஜாதியினர் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் தங்களை இணைத்து இடஒதுக்கீடு கோரிய போது அவர்களது கோரிக்கையை ஏற்று செயல்படுத்தினார் கட்டார்.
இது இந்த தேர்தலில் கட்டாருக்கு கை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மை ஜாதியினரான ஜாட் வாக்குகளை எதிர்க்கட்சிகள் அறுவடை செய்ய ஓரணியில் திரளாமல் இருப்பதும் பாஜகவுக்கு சாதகமானதாக இருக்கும். இப்படி பெரும்பான்மை ஜாதியினரை அரவணைத்துச் சென்றவர்கள் என்பதால் சிறுபான்மை ஜாதியினராக இருந்த போதும் பட்னவிஸையும் கட்டாரையும் முதல்வர் வேட்பாளர்களாக முன்னிறுத்தியுள்ளது பாஜக.