கர்நாடக அரசியல் குழப்பம்.. லோக்சபாவில் கொந்தளித்த காங்கிரஸ் எம்பிக்கள்.. ராஜ்நாத்சிங் கிண்டல் பதிலடி
டெல்லி: கர்நாடகா அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக இல்லை என்று, லோக்சபாவில் இன்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ராகுல் காந்திதான் ராஜினாமா கலாச்சாரத்தை தொடங்கி வைத்தார் என்றும் கிண்டல் செய்தார் அவர்.
கர்நாடகாவில், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே காங்கிரசை சேர்ந்த 10 எம்எல்ஏக்களும், மஜதவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் ஆட்சிக்கு ஆதரவளித்து வந்த சுயேட்சை உறுப்பினர் நாகேஷ் என்பவரும் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் அளித்தார்.
இந்த திடீர் கொந்தளிப்புகளின் பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. இந்த பிரச்சனை லோக்சபாவிலும் இன்று எதிரொலித்தது. பாஜகவை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள், கோஷங்கள் எழுப்பினர்.
Defence Minister Rajnath Singh in Lok Sabha: Our party has nothing to do with what is happening in Karnataka. Our party has never indulged in horse trading. pic.twitter.com/EqdWlBnXi1
— ANI (@ANI) July 8, 2019
இதற்கு பதில் அளித்து பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். "கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும், பாஜகவுக்கும் தொடர்பு இல்லை. பாஜக எப்போதுமே குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், ராஜினாமா செய்யும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்தது ராகுல் காந்தி. அவர் தனது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகுதான் ஒவ்வொருவராக ராஜினாமா செய்து வருகிறார்கள். மூத்த தலைவர்களும் கூட தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். எனவே உங்கள் தலைவரை கேட்பதை விட்டுவிட்டு, எங்கள் மீது பழி போடாதீர்கள்", இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
ராஜ்நாத்சிங் பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ் எம்பிக்கள் பாஜகவை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.