ம.பி. காங் எம்எல்ஏக்களிடம் பேரமா? ஆதாரம் இருக்கிறதா.. திக் விஜய் சிங்கின் புகாரை மறுக்கும் பாஜக!
டெல்லி: காங்கிரஸ் எம்எல்ஏக்களை கோடிக்கணக்கில் பேரம் பேசி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங்கின் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்களை பேரம் பேசி தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி வருவது கர்நாடகா சட்டசபையில் அரங்கேறியதை யாரும் மறந்திருக்க முடியாது.
புகார்
மத்திய பிரதேசம், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சி நேரடியாக ஆட்சியில் உள்ளது. ஏனைய சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. தற்போது மேற்கண்ட இடங்களில் கர்நாடகத்தில் செய்தது போல் ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சி செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
கனவு
அதிலும் குறிப்பாக மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக மூத்த தலைவர் திக் விஜய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில் மத்திய பிரதேசத்தில் ஏதேனும் சித்து விளையாட்டுகளை விளையாடி காங்கிரஸ் அரசை கவிழ்த்துவிட்டு முதல்வராக சிவராஜ் சிங்கும், துணை முதல்வராக நரோட்டம் மிஸ்ராவும் ஆக கனவு காண்கின்றனர்.
தவணைகளில் பணம்
கடந்த 15 ஆண்டுகளாக அந்த மாநிலத்தில் கொள்ளையடித்த இவர்கள் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ரூ 25 கோடி முதல் 30 கோடி வரை கட்சித் தாவ பேரம் பேசுகிறார்கள். முதலில் 5 கோடி பணம் முதல் தவணையாக கொடுக்கப்படுகிறது. ராஜ்யசபா தேர்தலின் போது கட்சி மாறி வாக்களித்தால் இரண்டாவது தவணையும், மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தவுடன் 3ஆவது தவணையும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
பாஜக மறுப்பு
பேரம் பேசி ஆட்சியை கவிழ்ப்பதற்கு இது ஒன்றும் கர்நாடகம் இல்லை. மத்திய பிரதேசம் விற்பனைக்கு அல்ல. நான் எதையும் ஆதாரமில்லாமல் பேச மாட்டேன் என கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டை அந்த மாநில எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவ் (பாஜக) மறுத்துள்ளார். அவர் கூறுகையில் நாங்கள் யாரையும் தொடர்பு கொள்ளவில்லை. மனசாட்சிபடி எங்கள் பக்கம் வரும் எம்எல்ஏக்கள் வரவேற்கப்படுகிறார்கள். நாங்கள் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியதற்கு ஆதாரம் இருந்தால் அதை வெளிப்படையாக திக் விஜய் சிங் வெளியிடட்டும் என்றார்.