நீங்க வருஷத்திற்கு ரூ.6000, நாங்க மாதத்துக்கு ரூ.6000! பாஜகவை வீழ்த்த காங். எடுத்த பிரம்மாஸ்திரம்
Recommended Video
டெல்லி: வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழை குடும்பங்களுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிவிப்பு லோக்சபா தேர்தலில் அக்கட்சியின் பிரம்மாஸ்திரமாக பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோடி அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி வழங்கப்படும் என்றும் அறிவித்த நிலையில், அதற்கு பதிலடியாக இந்த ஒரு பிரம்மாண்ட அறிவிப்பை ராகுல் காந்தி வெளியிட்டுள்ளார்.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல், 2 ஹெக்டேர் அளவுக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும். இந்த தொகை மூன்று தவணைகளில் தலா 2000 ரூபாய் என்று வழங்கப்படும். இதனால் 12 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் என்று அறிவித்திருந்தார்.
ஏழைகளுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும்.. காங். அதிரடி வாக்குறுதி.. ராகுல் காந்தி மாஸ்டர் ஸ்டிரைக்!
குறைந்த தொகை
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, 2000 ரூபாய் வழங்குவது என்பது மிகவும் குறைவான தொகை. இது விவசாயிகளுக்கு எந்த வகையிலும் பலன் தராது என்று காங்கிரஸ் கட்சி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தது. இந்த நிலையில்தான் ஏழைக் குடும்பங்களுக்கு, மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
மிகப்பெரிய நன்மை
காங்கிரசின் அறிவிப்புப்படி, 5 கோடி குடும்பங்கள், பலன் அடையும். குடும்பத்திற்கு 4 பேர் என்றாலும், 20 கோடி பேர் நேரடியாக இதனால், பலன் பெறுவார்கள். எனவே, எந்த வகையில் பார்த்தாலும், மத்திய பாஜக அரசு அறிவித்த, விவசாயிகளுக்கான, ஆண்டுக்கு 6 ஆயிரம் என்ற திட்டத்தை ஒப்பிட்டால் காங்கிரஸ் அறிவித்துள்ள இந்த திட்டம் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
காங்கிரஸ் திட்டம்
பாஜக அறிவித்துள்ள திட்டத்தில் பலன் பெற 2 ஹெக்டேர் நிலத்திற்கும் குறைவான விவசாயியாக இருக்க வேண்டும். நிலமற்ற ஏழைகளுக்கு இதனால் பலன் இல்லை. 2 ஹெக்டேருக்கும் அதிகமாக நிலம் வைத்திருந்தால் ஒருவேளை, அது வருமானமற்ற, தரிசு நிலமாக இருப்பின் அவர்களுக்கும் பாஜக அரசு அறிவித்த திட்டத்தால் பலன் கிடைக்காது. ஆனால், காங்கிரஸ் அறிவித்துள்ள திட்டத்தின்படி ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் என்பது, வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்க கூடியது. இந்த திட்டம் அமலுக்கு வந்தால், ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை எளிதாக பூர்த்தி செய்து கொள்ள வழி ஏற்படும்.
எதிர்பார்ப்பு
எனவேதான் இந்த திட்டம் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா தேர்தலுக்கான பிரம்மாஸ்திர அறிவிப்பாக பார்க்கப்படுகிறது. பாஜக தரப்பில் இந்த பிரம்மாஸ்திரம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாஜக எந்த மாதிரி பதில் அளிக்கப் போகிறது என்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.