இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் மோடி, மோகன் பகவத் கனவு நிறைவேறாது: ராகுல் அட்டாக்
டெல்லி: இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் கனவு நிறைவேறாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் மாநில அரசுப் பணிகள் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தோருக்கு இடஒதுக்கீடு அளிக்காமல் காலி பணி இடங்கள் நிரப்பப்பட்டன. இதனை எதிர்த்து அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநில அரசின் உத்தரவை ரத்து செய்து, எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தரகாண்ட் மாநில அரசு முறையீடு செய்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மாநில அரசு பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு கட்டாயம் இல்லை. பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு கோருவது அடிப்படை உரிமை இல்லை என தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பு நாடு முழுவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இத்தீர்ப்பு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ன் தத்துவமே இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரானது. எஸ்சி, எஸ்டி பிரிவினர் முன்னேறுவதை பாஜகவும் ஆர். எஸ்.எஸ்-ம் ஒருபோதும் விரும்பியதும் இல்லை. அடிப்படை கட்டமைப்புகளை தகர்க்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் தலித்துகள் ஒருபோதும் இடஒதுக்கீட்டை விட்டுத் தரமாட்டோம். இட ஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் பிரதமர் மோடி , ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய பாஜக அரசு ஏற்கவில்லை என கூறுகிறது. அப்படியானால் இந்த பிரச்சனையை சரி செய்ய மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.
நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் இன்று எதிரொலித்தது. லோக்சபாவில் மத்திய அமைச்சர் தாவர் சந்த் கெலாட் இது குறித்து கூறுகையில், இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு எந்த ஒரு தொடர்பும் இல்லை. மத்திய அரசிடம் எந்த பிரமாண பத்திரத்தையும் உச்சநீதிமன்றம் தாக்கல் செய்யவும் கூறவில்லை.
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் இத்தகைய முடிவும் எடுக்கப்பட்டது என விளக்கினார். இது தொடர்பான விவாதங்களுக்குப் பின்னர் எதிர்க்கட்சி எம்.பிக்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.