அடுத்து ம.பி.. பின் ராஜஸ்தான்.. அமித் ஷாவின் அதிரடி பிளான்.. அகண்ட பாரத கனவை நெருங்கும் பாஜக!
Recommended Video
டெல்லி: கர்நாடகாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி ஆளும் வேறு சில மாநிலங்களிலும் ஆட்சி கவிழ வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பாஜக கொஞ்சம் கொஞ்சமாக தனது அகண்ட பாரத கனவை நோக்கி நகர்ந்து வருகிறது.
நேற்று கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத அரசு கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் கவிழ்ந்து உள்ளது. ஆட்சிக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியை தழுவி உள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் 3 பேர் பதவி விலகியதை அடுத்து அம்மாநில அரசு கவிழ்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு நேற்று 105 எம்எல்ஏக்கள் தேவைப்பட்ட நிலையில் காங்கிரஸ் மஜத கூட்டணிக்கு 109 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருந்தது.
சேகர் ரெட்டிக்கு 'லட்டு' மாதிரி வாய்ப்பு.. திருப்பதி தேவஸ்தான போர்டுக்கு பிரதிநிதியாகப் போறாராம்!
இப்போது என்ன
இந்த நிலையில் இதே பார்முலாவை பாஜக மற்ற மாநிலங்களிலும் செய்ய போவதாக தெரிகிறது. பாஜக 2014 மத்தியில் ஆட்சி அமைக்கும் போதே, மாநில தேர்தல்களில் வெற்றிபெற வேண்டும் என்று திட்டமிட்டு தீவிரமாக செயல்பட்டது. அதேபோல் உத்தர பிரதேசம் தொடங்கி வரிசையாக மாநில தேர்தல்களில் வெற்றிபெற்று வந்தது.
என்ன சுணக்கம்
ஆனால் கடந்த வருடம் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது. ஒரு மாநிலத்தில் கூட பாஜக அப்போது வெற்றிபெறவில்லை. இது பாஜக கட்சிக்கு சுணக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அதன்பின் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிரடியாக வேலை பார்க்க தொடங்கியது. அது நன்றாகவே அக்கட்சிக்கு உதவியது.
மாஸ் வெற்றி
நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 300+ இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. நாடு முழுக்க ஒரே தனிப்பெரும் கட்சி என்ற சிறப்பை பாஜக பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. இதன் மூலம் மீண்டும் பாஜக மாநிலங்களின் மீது தனது பார்வையை திருப்ப தொடங்கியது.
கர்நாடக அரசு
பாஜகவிற்கு கடந்த 10 மாதங்களாக கர்நாடகா மீதுதான் ஒரே கண்ணாக இருந்தது. தென்னிந்தியாவில் பாஜகவிற்கு கொஞ்சம் இடம் கொடுக்கும் மாநிலமாக கர்நாடகா மட்டுமே. இங்கு ஆட்சியை பிடித்தால் கண்டிப்பாக மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் ஆட்சியை பிடிக்கலாம் என்று பாஜக நினைக்கிறது. அமித் ஷா இதற்காகத்தான் ஆப்ரேசன் லோட்டஸை கொண்டு வந்தார்.
வேலை செய்துள்ளது
தற்போது அமித் ஷாவின் ஆபரேஷன் லோட்டஸ் வெற்றிபெற்றுள்ளது. இன்று பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா கர்நாடகாவில் ஆட்சி அமைக்க உரிமை கோர இருக்கிறார். நாளை பெரும்பாலும் எடியூரப்பா பதவி ஏற்பார் என்று தெரிகிறது. இந்த நிலையில் பாஜக அடுத்தபடியாக மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் ஆட்சி அமைக்க குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசமும் கர்நாடகா போலத்தான். அங்கு பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 114 இடங்களை வென்று பிஎஸ்பி மற்றும் எஸ்பி ஆதரவுடன் ஆட்சி அமைத்து வருகிறது. 108 இடங்களுடன் பாஜக எதிர்க்கட்சியாக உள்ளது. இதனால் அங்கு 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கர்நாடக போல ராஜினாமா செய்தால், பாஜக தனிப்பெரும் கட்சியாக மாறி ஆட்சியை பிடிக்கும்.
அடுத்து ராஜஸ்தான்
ஆனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் கொஞ்சம் வலுவாக இருக்கிறது. அங்கு பெரும்பான்மைக்கு 101 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 112 இடங்களும், அதன் கூட்டணிக்கு 121 இடங்களும் இருக்கிறது. ஆனால் இங்கும் கூட 10+ எம்எல்ஏக்கள் காங்கிரஸ் சார்பாக ராஜினாமா செய்தால் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல் மீண்டும் தேர்தலோ, ஆளுநர் ஆட்சியோ நடக்க வாய்ப்புள்ளது.
எத்தனை இடங்கள்
ஏற்கனவே 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 17 மாநிலங்களில் பாஜக தனியாகவும் கூட்டணியுடனும் ஆட்சி செய்கிறது. இது போக தமிழகத்தில் பாஜக அதிமுகவிற்கு நெருக்கமாக இருக்கிறது. இப்போது 19வது மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது. இதனால் இன்னும் சிலவருடங்களில் அல்லது மாதங்களில் பாஜக தனது அகண்ட பாரத கனவை அடைந்து விட வாய்ப்புள்ளது.