இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது... கம்யூ. கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா பேச்சு
டெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளேன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜா தெரிவித்துள்ளார்.
2012 முதல் இந்திய கம்யூ. பொதுச்செயலாளராக இருந்த எஸ்.சுதாகர்ரெட்டி உடல்நிலை காரணமாக பதவியை ராஜினாமா செய்த நிலையில், டெல்லியில் நடந்த கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ராஜாவுக்கு, முன்னாள் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மாநிலங்களவைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ராஜாவின் எம்.பி. பதவி காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வானார் டி. ராஜா!
இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய டி ராஜா, இன்றைய காலம் மிகுந்த சோதனைக்குரியது என்றார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் சேர்ந்து இந்துத்துவா நாடாக மாற்ற முயற்சி செய்கிறது என்றும் குற்றம்சாட்டினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
டி.ராஜா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள சித்தாத்தூர் கிராமத்தில் பிறந்தவர். மாநிலங்களவை எம்.பி.யான இவர் கட்சியின் தேசிய செயற்குழுவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்தார்.
இவரது மனைவி ஆனி கேரளத்தை சேர்ந்தவர். அவர் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். இவர்களுக்கு அபரஜிதா என்ற மகள் உள்ளார்.