1952ல் இஸ்ரேலில் வந்த அதே குடியுரிமை சட்டம்.. இப்போது இந்தியாவில்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ!?
லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா கிட்டத்தட்ட 1952ல் இஸ்ரேலில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை மசோதாவை போன்றதுதான்.
டெல்லி: லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த மசோதா கிட்டத்தட்ட 1952ல் இஸ்ரேலில் தாக்கல் செய்யப்பட்ட குடியுரிமை மசோதாவை போன்றதுதான். இரண்டு மசோதாக்களும் நிறைய ஒற்றுமைகளை கொண்டு இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூலம் இன்று லோக்சபாவில் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம் தற்போது நடந்து வருகிறது.
இந்த சட்டத்திருத்த மசோதா மூலம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். இந்த நிலையில் இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா மற்றும் இஸ்ரேல் குடியுரிமை மசோதா இரண்டும் ஒரே மாதிரியானது என்ற புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க டி.ஆர் .பாலு வலியுறுத்தல்
இஸ்ரேல் எப்படி
இதற்கு கொஞ்சம் இஸ்ரேல் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும். போரின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்த பின் இஸ்ரேல் என்ற நாடு மொத்தமாக உருவானது. இந்த இஸ்ரேலில் 1952ல் பாலஸ்தீன இஸ்லாம் மக்களை வெளியேற்ற வைக்கும் வகையில் முக்கியமான குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. 1952ல் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
என்ன விதி
இந்த சட்டத்தின் இரண்டு முக்கிய விதிகள். விதி 1ன் படி உலகம் முழுக்க இருக்கும் யூதர்கள் இஸ்ரேலில் குடியேறலாம். அவர்கள் அகதிகளாக கருதப்பட மாட்டார்கள். அவர்களுக்கு இஸ்ரேலில் குடி உரிமை வழங்கப்படும். இஸ்ரேலை மொத்தமாக யூத நாடாக மாற்ற இப்படி செய்யப்பட்டது .
இன்னொரு விதி
விதி 2ன் படி இஸ்ரேலில் புதிதாக பாலஸ்தீன இஸ்லாமியர்கள் குடியேற முடியாது. அங்கு இஸ்லாமியர்கள் குடியுரிமை பெற வேண்டும் என்றால் 1949ல் அவர்களின் பெயர் அங்கு பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். 1952ல் அவர்கள் அங்கு பதிவு செய்து வாழ்ந்து இருக்க வேண்டும். புதிதாக வந்த குடியேறி எத்தனை வருடங்கள் வாழ்ந்தாலும் அவர்கள் குடிமகனாக ஏற்கப்பட மாட்டார்கள்.
என்ன நடவடிக்கை
இவர்கள் உடனே நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள், அல்லது கைது செய்யப்படுவார்கள். இந்த சட்டம் காரணமாக அதிக அளவில் பாலஸ்தீன அகதிகள் உருவாக்கப்பட்டார்கள். இவர்கள் எல்லோரும் இஸ்ரேலை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் அகதிகளாக மாறிய பாலஸ்தீன மக்கள் இன்னும் வீடுகள் இன்றி சுற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
இரண்டும் ஒன்று
இப்போது இந்திய குடியுரிமை சட்டம் குறித்து பார்ப்போம். இஸ்ரேல் சட்டம் போலத்தான் இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத பிரச்சனை காரணமாக, இந்தியாவிற்கு முறையின்றி வரும் மக்கள் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும். அரசு அவர்களை கைது செய்யாது. கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் இந்தியாவில் குடியுரிமை பெற முடியும்.
ஆனால் எப்படி
ஆனால் இது இஸ்லாமியர்களுக்கு எதிரானது. இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அவர்கள் இந்தியாவில் முறையின்றி நுழைய இதுபோல அனுமதி கிடையாது. இதற்கு முன் எத்தனை வருடங்களுக்கு முன் இஸ்லாமியர் ஒருவர் இந்தியாவில் நுழைந்து இருந்தாலும் அவர் கைது செய்யப்படுவார் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார் .
ஒரே மாதிரி
இரண்டு சட்டத்தின் அம்சங்களும் ஒரே மாதிரியானது. இதனால்தான் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறது. இந்த சட்டம் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டால் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் சட்டமாக நிறைவேறும் என்பது குறிப்பிடத்தக்கது.