தமிழகம் உட்பட 19 மாநிலங்கள்-43 மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பிரமாண்ட யாத்திரை- பா.ஜ.க. மெகா ப்ளான்
டெல்லி: தமிழகம், உத்தரப்பிரதேசம் உட்பட 19 மாநிலங்களில் 43 மத்திய அமைச்சர்கள் பங்கேற்கும் பிரமாண்டமான மக்களை சந்திக்கும் யாத்திரையை ஆகஸ்ட் 16 முதல் 3 நாட்களுக்கு நடத்த பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
யாத்திரை அரசியல் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு (பா.ஜ.க, பாஜக) புதியது அல்ல. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான யாத்திரை தொடங்கி தமிழகத்தின் வேல் யாத்திரை வரை பா.ஜ.க.வின் ஒவ்வொரு யாத்திரையும் கவனம் பெற்றவைதான்.
அத்வானி காலத்தில் தொடங்கப்பட்ட யாத்திரை அரசியல் கலாசாரம் தற்போது வரை நீடிக்கிறது. நாடாளுமன்றத்தில் புதிய மத்திய அமைச்சர்களை அறிமுகப்படுத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு இரு சபைகளையும் முடக்கி வருகின்றன. பெகாசஸ் ஒட்டு கேட்பு, விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு என பல்வேறு பிரச்சனைகளுக்காக மத்திய அரசுடன் எதிர்க்கட்சிகள் மல்லுக்கட்டுகின்றன.
சென்னையில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க காரணம் என்ன?..ஆக்ஸிஜன் கிடைக்காமல் அவதி எல்லாம் மறந்து போச்சா!
பிரதமர் விமர்சனம்
இதனை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர் மோடி, இதுவரை இல்லாத வகையில் பெண்கள், ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் என அனைத்து தரப்பினருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. அப்படியான பெருமிதமான நிலையில் மத்திய அமைச்சர்களை அறிமுகப்படுத்தவிடாமல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடாவடித்தனமாக நாடாளுமன்றத்தை முடக்குகின்றன என சாடியிருந்தார்.
ஆக.16 முதல் யாத்திரை
இந்த நிலையில் பா.ஜ.க. உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் சட்டசபை தேர்தல் களப் பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. இதன் ஒருபகுதியாக ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் ஆகஸ்ட் 20 வரை மக்களை சந்திக்கும் ரத யாத்திரையை நடத்த உள்ளது பா.ஜ.க. 43 மத்திய அமைச்சர்கள் இந்த யாத்திரையில் பங்கேற்கின்றனர். இவர்களில் 4 பேர் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
3 நாட்களில் 400 கி.மீ பயணம்
மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களிடத்தில் பிரசாரம் செய்யும் வகையில் இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. யாத்திரையை வெற்றிகரமாக நடத்துவதற்காக பொறுப்பாளர்களை நியமிக்கவும் பாஜக மேலிடம் உத்தரவிட்டிருக்கிறது. யாத்திரை குறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடுவதற்கான பொறுப்பாளர்கள், யாத்திரையில் பங்கேற்கவர்களை வரவேற்க, உணவு வழங்க என அனைத்துக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 3 நாட்களில் 300 முதல் 400 கி.மீ. பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் 3 அல்லது 4 லோக்சபா தொகுதிகள், 4 அல்லது 5 மாவட்டங்களில் ஒவ்வொரு மத்திய அமைச்சரும் யாத்திரையை நடத்துவர்.
150 லோக்சபா தொகுதிகள்
மொத்தம் 15,000 கி.மீ பயணம் மேற்கொண்டு 150 லோக்சபா தொகுதி மக்களை சந்திக்க இருக்கிறது இந்த யாத்திரை. டெல்லி, உ.பி., பீகார், ராஜஸ்தான், திரிபுரா, ஜார்க்கண்ட், குஜராத், அருணாச்சல பிரதேசம், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, ஒடிஷா, மணிப்பூர், மகாராஷ்டிரா, அஸ்ஸாம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இந்த யாத்திரை நடத்தப்பட உள்ளது. உதாரணமாக மின்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் கயாவில் தொடங்கி அவரது ஆரா தொகுதி வரை இந்த யாத்திரயை நடத்துவார்; தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், ராஜஸ்தானில் ஆல்வார் தொகுதி நோக்கி யாத்திரயை மேற்கொள்வார்.
பயண திட்டம் என்ன?
இந்த பயணத்தின் போது தொகுதிகளில் உள்ள மதத் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், நாட்டுக்காக உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பங்கள் என பல தரப்பினரையும் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த யாத்திரை வரும்போது அனைத்து பா.ஜ.க. எம்.பி.க்களும் தங்களது தொகுதிகளில் கண்டிப்பாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பிரமாண்ட கட் அவுட்டுகள்
மக்களை எளிதாக சென்றடையும் வகையில் பிரமாண்டமாக மக்களை ஈர்க்கும் வகையில் யாத்திரை நடத்தப்பட வேண்டும். கொரோனா பரவல் காலம் என்பதால் உரிய கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த யாத்திரையின் போது தாமரை சின்னம், பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான பிரமாண்ட கட் அவுட்டுகளை இடம்பெறச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த யாத்திரையில் பாஜகவின் அனைத்து நிலை தொண்டர்களும் கட்டாயம் பங்கேற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.