முதல்வர் பதவிகள்... பாஜகவின் புதிய வியூகங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் 'மண்ணின் மைந்தர்கள்'
Recommended Video
டெல்லி: பாரதிய ஜனதா கட்சி தேர்தலை எதிர்கொள்ளும் மாநிலங்களில் முதல்வர் பதவி தொடர்பாக முன்னெடுக்கும் புதிய அரசியல் வியூகங்களுக்கு பின்னடைவை தருகின்றன அம்மாநிலங்களின் மண்ணின் மைந்தர்கள் முழக்கம்.
நாடு விடுதலை அடைந்த காலம் தொட்டு மாநில சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் அம்மாநிலங்களில் பெரும்பான்மை ஜாதியினராக இருப்பவரைத்தான் பொதுவாக முதல்வர் பதவியில் அமர வைக்கும். இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்காக சிறுபான்மை ஜாதியினர் அதிக முறை முதல்வர்களாக இருந்துள்ளனர்.
கர்நாடகாவில் இருபெரும் ஜாதிகளான ஒக்கலிகா, லிங்காயத்துகள்தான் முதல்வராகி இருக்கின்றனர். மகாராஷ்டிராவில் மாராத்தா ஜாதியினர்தான் முதல்வராகி இருக்கின்றனர். ஹரியானாவில் ஜாட் ஜாதியினர்தான் முதல்வராகி இருக்கின்றனர்.
நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண்கள் மாயமான வழக்கு.. குஜராத் ஹைகோர்ட் கோபம்.. 10ம் தேதி வரை கெடு
புதிய வியூகம்
மகாராஷ்டிராவில் 2014 சட்டசபை தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் தனித்தனியே போட்டியிட்டன. தேர்தலுக்குப் பின்னர் இரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்தன. அப்போது மராத்தா ஜாதி அல்லாத பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பட்னாவிஸை பாஜக முதல்வராக்கியது.
மராத்தா ஜாதியினர் அதிர்ச்சி
இது மராத்தா ஜாதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா மக்கள் தொகையில் 30% உள்ள மராத்தா ஜாதியினரே கல்வி, தொழில்நிறுவனங்கள், விவசாயம் ஆகியவற்றில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அதனால் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் மராத்தா ஜாதியினருக்கு தனி இடஒதுக்கீடு, விவசாயிகள் போராட்டம் என பாஜகவின் பட்னாவிஸ் அரசுக்கு பல முனைகளில் இருந்து நெருக்கடி வந்தது.
சிவாஜி வாரிசுகள்
இதை உணர்ந்துதான் சத்ரபதி சிவாஜியின் வாரிசான சம்பாஜி ராஜேவை 2016-ல் ராஜ்யசபா எம்.பி.யாக்கியது பாஜக. அப்போது தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) தலைவர் சரத்பவார் முன்வைத்த கருத்து மிக முக்கியமானது. மகாராஷ்டிராவில் பெஷாவாக்களை (பிரதமர் - முதல்வர் பதவிகள்) அன்று சத்ரபதிகள் நியமித்தார்கள்; இன்று சத்ரபதிகளை பெஷாவாக்கள் நியமிக்கிறார்கள் என்றார்.
சரத்பவார் கருத்து
என்சிபி மற்றும் காங்கிரஸ் கட்சியின் வாக்குவங்கியே மராத்தா ஜாதியினர்தான். வெளிப்படையாக சரத்பவார் இப்படி பேசியதால் அதிர்ந்து போன பாஜக அடுத்தடுத்து என்சிபியில் எம்.எல்.ஏக்களாக இருந்த சத்ரபதி சிவாஜியின் வாரிசுகளை தங்கள் பக்கம் இழுத்து சமாளிக்க முயற்சித்தது. மேலும் மராத்தியர்களுக்காகவே உருவாக்கப்பட்ட சிவசேனாவை (சிவ்- சிவாஜி; சேனா- ராணுவம்; மராத்தியர்களுக்கான கட்சி) ஏகப்பட்ட இழுபறிகளுக்கும் இடையேயும் தக்க வைத்தது பாஜக.
2019 தேர்தல்
ஆனால் 2019 தேர்தலிலும் பட்னாவிஸ்தான் முதல்வர் என்கிற முழக்கத்தை பாஜக இடைவிடாமல் முன்வைத்தது. சிவசேனாவோ, தங்கள் கட்சியைச் சேர்ந்தவரே முதல்வர் என பிரசாரம் செய்தது. தேர்தலில் பாஜக 105 இடங்களைக் கைப்பற்றிய போதும் சிவசேனா முதல்வர் பதவியில் பிடிவாதம் காட்டியது. ஒரு கட்டத்தில் பாஜகவுடனான உறவையே துண்டித்துக் கொண்ட சிவசேனா, காங்கிரஸ்- என்சிபியுடன் கை கோர்த்துக் கொண்டது.
சிவசேனாவுடன் கூட்டணி
சிவசேனாவுடன் கை கோர்ப்பது எப்படி என தொடக்கத்தில் என்சிபியும் காங்கிரஸும் தயக்கம் காட்டின. அதேநேரத்தில் முதல்வர் பதவியை அடைவதற்காக இத்தனை ஆண்டுகால கூட்டணியை விட்டு வெளியே வந்திருக்கும் சிவசேனாவின் சுயமரியாதை பாதுகாக்கும் வகையில் அக்கட்சிக்கே முதல்வர் பதவி என்பதை என்சிபி- காங். தலைவர்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டி வந்தனர். அதனால்தான் பட்னாவிஸை முதல்வராக்க விடாமல் இருக்கிற அத்தனை குழப்பங்களையும் பேசி பேசி கூட்டணியை சிவசேனா-என்சிபி-காங். உறுதி செய்தது.
மகா. மக்களுக்கானது சிவசேனா
அத்துடன் தேர்தல் அரசியலுக்கே வராத மண்ணின் மைந்தரான உத்தவ் தாக்கரேவையே முதல்வராகவும் அறிவித்தது இந்த கூட்டணி. இதில் மிக முக்கியமானதாக பார்க்க வேண்டியது என்சிபியின் நவாப் மாலிக் தெரிவித்த ஒரு கருத்துதான். அவர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறுகையில், சிவசேனா என்பது அது உருவாகும் போதே இந்துத்துவா கொள்கையுடன் பிறக்கவில்லை. அது மகாராஷ்டிரா மக்களுக்கு சேவையாற்றத்தான் உதயமான கட்சி. பின்னாளில் பாஜகவுடன் இணைந்ததால் அதன் திசைவழி மாறியது என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருக்கிறார். இப்படியான மண்ணின் மைந்தர் என்ற உணர்வுதான் 162 எம்.எல்.ஏக்களையும் ஓரணியில் ஒன்று திரட்ட வைத்து பாஜகவின் வியூகத்தை வீழ்த்தியிருக்கிறது.
ஜாட்கள் புறக்கணிப்பு
ஹரியானாவைப் பொறுத்தவரையில் மகாராஷ்டிராவைப் போல ஜாட் ஜாதியினர்தான் பெரும்பான்மையினர். அம்மாநிலத்தின் முதல்வர்களாக இருந்த அத்தனை லால்களுமே ஜாட் ஜாதியினர்தான்.
ஜாட்கள் போராட்டம்
2014 தேர்தலில் ஜாட் ஜாதியைச் சேர்ந்தவரை முதல்வராக்காமல் பஞ்சாபி ஜாதியை சேர்ந்த மனோகர்லால் கட்டாரை முதல்வராக்கியது பாஜக. அங்கும் மண்ணின் மைந்தன் குமுறல் வெடித்தது. அதனால்தான் மராத்திகளைப் போல ஜாட்கள் இடஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்து அரசை ஆட்டம் காணவைத்தனர். அந்த மாநிலத்தில் பெரும்பான்மையினராகிய ஜாட்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு புழுக்கமாக இருந்தது.
விஸ்வரூப காங்கிரஸ்
அதனால்தான் திசைக்கொரு பக்கமாக எதிர்க்கட்சிகள் சிதறிக் கிடந்த போதும், காங்கிரஸுக்கு சிங்கிள் டிஜிட் தான் என ஊடகங்கள் அடித்துச் சொன்னபோதும் பீனிக்ஸ் பறவையாய் காங்கிரஸ் வீறு கொண்டு எழுந்தது. இதற்கு காரணமே ஜாட்கள், தலித்துகளின் வாக்குகள் அப்படியே காங்கிரஸுக்கும் ஜேஜேபிக்கும் விழுந்ததுதான். தங்களது மண்ணைச் சேர்ந்தவர் முதல்வராக இல்லாத போது தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிற உணர்வை மகாராஷ்டிராவும் ஹரியானாவும் மட்டும் வெளிப்படுத்தவில்லை.
ஒக்கலிகாக்கள் கோபம்
கர்நாடகாவும் அப்படித்தான். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ்-காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்ட போது மண்ணின் மைந்தர்களான ஒக்கலிகாக்கள் கொந்தளித்தனர். அடுத்ததாக காங்கிரஸ் தலைவரும் ஒக்கலிகா ஜாதியை சேர்ந்தவருமான சிவக்குமாரை சிறையில் அடைத்த போது வெகுண்டு எழுந்து பெங்களூரு நகரை முற்றுகையிட்டு முடக்கினர் ஒக்கலிகர்கள். லோக்சபா தேர்தலின் போது எப்படியும் ஒக்கலிகர் வாக்குகளை அறுவடை செய்யலாம் என காத்திருந்த பாஜகவுக்கு இது மிகப் பெரும் பின்னடைவானது.
மண்ணின் மைந்தர்கள்
அதேபோல் பாஜகவில் 75 வயதினருக்கு ஓய்வு கொடுப்பது வழக்கம். ஆனால் மற்ற மாநிலங்களில் செய்ததைப் போல சிறுபான்மை ஜாதியைச் சேர்ந்தவரை முதல்வராக்க கர்நாடகாவில் பாஜகவால் முடியவில்லை. ஏனெனில் அப்படி செய்தால் ஆட்சியே அமைக்க முடியாது என்பதால் வேறுவழியே இல்லாமல் லிங்காயத்து ஜாதியைச் சேர்ந்த எடியூரப்பாவை முதல்வராக்கியது பாஜக. பாஜக இப்படி வகுக்கும் வியூகங்களுக்கு மாநிலங்கள் தோறும் முட்டுக்கட்டையாகவும் பின்னடைவை தரக் கூடியதாகவும் இருப்பவை மண்ணின் மைந்தர்கள் முழக்கமும் உணர்வும்தான்.