என்ன நியாயம்? எடியூரப்பாவுக்கு க்ரீன் சிக்னல்.. அத்வானி உள்ளிட்டோருக்கு முதியோர் குழுவில் இடம்!
டெல்லி: 75 வயதானவர்களை முதியோர் குழுவில் இடம்பெற வைத்து ஒதுக்கி வைக்கும் கொள்கைக்கு விடைகொடுத்துவிட்டு 76 வயதாகும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பச்சைகொடி காட்டியுள்ளது பாஜக மேலிடம்.
2014-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த போது முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு கேபினட்டில் என்ன இடம் கிடைக்கும் என்பது விவாத பொருளாக இருந்தது. முன்னாள் துணை பிரதமர் என்பதால் அமைச்சர் பதவி கொடுப்பது சரியாக இருக்காது என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
ஆனால் பாஜக மேலிடமோ அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 75 வயதை கடந்தவர்களை ஒதுக்கி வைக்கும் வகையில் கட்சியில் ஆலோசனை குழு என ஒன்றை உருவாக்கி அதில் இடம்பெறவைத்தனர். இதனால் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதே பாணியில் 75 வயது என்பதால் குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேலும் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். 75 வயதை காரணம் காட்டி மத்திய அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, சித்தேஸ்வராவும் ராஜினாமா செய்தனர்.
பாஜகவை தூரமாக வைத்தும்.. அதிமுகவின் அடிவயிற்றை கலக்கும் "அந்த 3 லட்சம்"!
அத்துடன் எந்த தேர்தலிலும் அத்வானி உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்களை பிரசாரத்துக்கு கூட பாஜக அழைப்பது இல்லை. அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் இந்த அவமானம் தங்களுக்கும் நேரிடும் என கருதியே மூத்த பாஜக தலைவர்கள் பலரும் ஒதுங்கி மவுனம் காத்தனர்.
இந்த அடிப்படையில்தான் கர்நாடகாவில் மீண்டும் முதல்வராக 76 வயதாகும் எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால் பாஜக மேலிடம் எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது.
தற்போது கர்நாடகா முதல்வராக 4-வது முறையாக எடியூரப்பா பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே 3 முறை முதல்வராக பதவி வகித்த எடியூரப்பா 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவி வகித்தது இல்லை. சொற்பநாட்களில் பதவியை பறிகொடுத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.