பாஜக போட்டு கொடுத்த திட்டம் ஓகே. கண்மணி-அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா- ஆட்சிக்கு நோ தொந்தரவு!
டெல்லி: அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை சசிகலாவுக்கு தருவது என்றும் முதல்வராக ஈபிஎஸ், துணை முதல்வராக ஓபிஎஸ் நீடிப்பது என்றும் பாஜக கொடுத்த அஜெண்டாவின்படி பேச்சுவார்த்தைகள் ஜரூராக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா ஜனவரி மாதம் விடுதலையாவது உறுதியானது. அதற்கு முன்னரே சசிகலாவை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
அப்படி சசிகலா வெளியேவந்தால் என்ன மாதிரியான அரசியல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டு என்பதை இப்போது டெல்லி மேலிடம் முடிவு செய்து கொண்டிருக்கிறது. டெல்லிக்கு தனிவிமானத்தில் சென்ற தினகரனிடம் டெல்லி மேலிடம் இது தொடர்பாக விவாதித்திருக்கிறது.
டெல்லியில் ரகசிய மேலிட சந்திப்புகளில் என்னதான் சொன்னார்கள்? சசிகலாவுடன் தினகரன் மந்திராலோசனை
அதிமுக சசிகலா வசம்
தினகரன் தரப்பைப் பொறுத்தவரை, சசிகலா விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்; அதிமுக அவர் வசமாக வேண்டும்; இதற்காக எந்த நிபந்தனையையும் ஏற்கவும் தயார். முதல்வர் பதவி எங்களுக்கு வேண்டாம். அந்த பதவியை விரும்பியதால்தான் இன்று சிறைவாசத்தை அனுபவிக்கிறார் சசிகலா. அதனால் கட்சி எங்கள் வசம் இருக்கட்டும் என கதறலாக பேசியிருக்கிறார்.
பாஜக முன்வைக்கும் பார்முலா
இதனைத் தொடர்ந்து சரி அதிமுக பொதுச்செயலாளர் பதவி சசிகலா வசம் இருக்கட்டும்; முதல்வர் பதவியில் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வராக ஓ. பன்னீர்செல்வமும் தொடர்ந்து நீடிக்க வேண்டும். அவர்களை எந்த தொந்தரவும் செய்யாமல் கட்சியும் ஆட்சியும் சுமூகமாகப் போவதுதான் தேர்தலின் போது உதவியாக இருக்கும் என டெல்லி மேலிடம் ஒரு பார்முலாவை முன்வைத்திருக்கிறது.
ஆளும் தரப்பில் தயக்கம்
இந்த பார்முலாவின் அடிப்படையில் சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜரூராக நடைபெற்று வருகின்றன. பாஜகவின் இந்த பார்முலாவை இருதரப்பும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டு வருகின்றன. இருந்தபோதும் நாளையே இன்னொரு கூவத்தூர் பார்முலாவை சசிகலா அண்ட் கோ அரங்கேற்றாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லையே என்பது ஆளும் தரப்பின் தயக்கம்.
முதல்வர் வேட்பாளர் பின்னர் முடிவு
இதற்கு ஆட்சி முடியும்வரை உங்களுக்கு தொந்தரவு இருக்காது; முதல்வர் வேட்பாளர் யார் என்பது பின்னர் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும் சமாதானப்படுத்தப்பட்டிருக்கிறது. இதனை ஆளும் தரப்பும் ஓரளவு அரைமனதுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதிமுகவின் செயற்குழு கூட்டத்திலும் இதுபற்றி விவாதிக்கப்பட இருக்கிறதாம். இப்போதைக்கு பாஜக போட்டு வைத்திருக்கும் திட்டம் ஓ.கே. கண்மணிதானாம்!.