சோ கால்ட் சாணக்கியர்களுக்கு சவால்.. உ.பி, கர்நாடகா, கோவா, மே.வங்கம், திரிபுரா பாஜகவில் கலக குரல்கள்!
டெல்லி: சாணக்கியத்தனத்தால் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறோம் என சவடால் பேசிய பாரதிய ஜனதா கட்சிக்கு உ.பி., கர்நாடகா, கோவா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் கட்சிக்குள் எழுந்துள்ள கலகக் குரல்கள் தலையிடியாக உருவெடுத்துள்ளன.
2014 லோக்சபா தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அதிகாரத்தை நோக்கி முன்னேற எந்த வழியையும் கையில் எடுப்போம் என்பதுதான் பாஜகவின் சாணக்கியத்தனமாக பேசப்பட்டது. அதாவது பிற கட்சி எம்.எல்.ஏக்களை வளைப்பது, பிற கட்சி எம்.எல்.ஏக்களை கூண்டோடு ராஜினாமா செய்ய வைத்து ஆட்சி கவிழ்ப்பது ஆகியவைதான் சாணக்கியத்தனமாக சொல்லப்பட்டன.
அதேபோல் கட்சிகளையே கபளீகரம் செய்து தேர்தல்களில் வெல்வது என்கிற புதிய அரசியலையும் களமிறக்கியது பாஜக. கடந்த 7 ஆண்டுகளாக இந்த கொல்லைப்புற அரசியலில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாஜகவுக்கு இப்போது பல மாநிலங்களில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் உட்கட்சி கலகக் குரல்கள் ஆகப் பெரும் சிக்கலாக உருமாறி நிற்கின்றன
அமைச்சர் பதவி...புதுச்சேரியில் பாஜகவின் அப்பா, மகன் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா? அதிர்ச்சியில் டெல்லி
யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தி
உத்தரப்பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது மக்களிடத்திலும் பாஜகவிலும் கடும் அதிருப்தி இருக்கிறது. இதனை சரிசெய்வதற்காக மூத்த தலைவர்களை டெல்லி பாஜக மேலிடம் அனுப்பி கொண்டே இருக்கிறது. அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் டெல்லி சென்று மந்திராலோசனை கூட்டங்களில் பங்கேற்றார். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் யோகி ஆதித்யநாத் மீண்டும் வென்றுவிட்டால் 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அவரே முன்னிறுத்தப்படலாம் என்கிற கருத்துகள் உலவுகின்றன. ஆனால் இப்போது யோகி ஆதித்யநாத்தால் பாஜகவின் உத்தரப்பிரதேச வெற்றியே கேள்விக்குறியாகி நிற்கிறது. இதனை சமாளிக்க அடுத்தடுத்து ஏராளமான கட்சி தாவல்கள் உள்ளிட்டவற்றை பாஜக அரங்கேற்றி பார்க்கிறது.
எடியூரப்பாவுக்கு ஆப்பு?
கர்நாடகாவில் 78 வயதாகும் முதல்வர் எடியூரப்பாவை வீட்டுக்கு அனுப்புங்கள் என்று பாஜகவினரே போர்க்கொடி தூக்குகின்றனர். தென்னிந்தியாவில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். ஆனால் முதல்வர் எடியூரப்பாவை மாற்றாவிட்டால் கட்சியில் பெரும் கலகம் வெடிக்கும் அபாயகரமான சூழ்நிலை உள்ளது. அதேநேரத்தில் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து தூக்கினால் அவர் என்ன எதிர்வினையாற்றுவாரோ என்கிற அச்சமும் டெல்லி பாஜக மேலிடத்துக்கு கவலையாக இருக்கிறது.
கோவா பாஜகவில் அக்கப்போர்
இதேபோல் கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்துக்கு எதிராக அமைச்சரவை சகாக்களே அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இதனையும் சமாளிக்க பாஜக மூத்த தலைவர் பி.எல். சந்தோஷ் கோவாவுக்கும் டெல்லிக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார். கோவாவிலும் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அதிருப்தியாளர்களை சரிகட்டுவதில் முனைப்பாக இருக்கிறது.
தாவ தயாராகும் பாஜக எம்.எல்.ஏக்கள்
திரிபுராவில் ஏற்கனவே 9 எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவ தயாரகிவிட்டனர். முதல்வர் பிப்லப்பை மாற்றாவிட்டால் கட்சி தாவுவது உறுதி என கங்கணம் கட்டிக் கொண்டிருக்கின்றனர் பாஜக எம்.எல்.ஏக்கள். இவர்கள் அனைவருமே மாஜி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்தான். இதனால் திரிபுராவில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியும் நித்ய கண்டத்தில்தான் த்த்தளித்துக் கொண்டிருக்கிறது.
குஜராத்தில் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் பாஜகவிலும் உட்கட்சி பூசல் பூகம்பமாகவே வெடித்திருக்கிறது. முதல்வர் விஜய் ரூபானிக்கும் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்குமான மோதலால் பாஜக தலைவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த அக்கப்போர் கோதாவில் துணை முதல்வர் நிதின் படேலும் இணைந்திருக்கிறார். இதனால் குழப்பங்களுக்கு தீர்வு காண மேலிட தலைவர் பூபேந்திர யாதவ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
கூண்டோடு தாவும் பாஜக எம்.எல்.ஏக்கள்
மேற்கு வங்கத்தில் ஏற்கனவே பாஜகவில் இருந்து பலரும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கே திரும்பிவிட்டனர். அதுவும் முகுல் ராய் போன்றவர்கள் பாஜகவைவிட்டு எஸ்கேப் ஆனதை டெல்லியால் இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை. இதில் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் கொத்தாக திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவப் போகிறார்கள் என்பது டெல்லி பாஜக மேலிடத்தை ஆடிப் பொக வைக்கிறது. சாணக்கியத்தனங்களால் பெருமிதப்பட்டு கொண்டிருந்த பாஜக இப்போது எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு மாநில கோஷ்டி பூசல்களில் நொந்து போய் கிடக்கிறது என்பதுதான் பரிதாபம்!