இதையும் பாஜக அரசியலாக்கலாமா.. எதை கொண்டு போய் எதனுடன் இணைப்பது.. என்ன சோதனை இது!
தேர்தல் அறிக்கையில் தடுப்பூசி மருந்தை தருவதாக பாஜக அறிவித்துள்ளது
டெல்லி: பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் முக்கியமானது என்னவென்றால் கொரோனா தடுப்பூசிதான். அதாவது பாஜக வெற்றி பெற்றால், கொரோனா தடுப்பு மருந்து வந்த பிறகு அனைவருக்குமே இலவசமாக அதைப் போடுவோம் என்று தேர்தல் வாக்குறுதியாக அளித்துள்ளனர்.
பாஜக இதைச் சொன்ன சில நிமிடங்களிலேயே நம்ம முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், நாங்களும் இலவசமாகவே தடுப்பு மருந்தைக் கொடுப்போம் என்று அறிவித்துள்ளார். இதுதான் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.
தேர்தல் காலத்து சமாச்சாரமாக எப்படி கொரோனாவை இவர்கள் மாற்றினார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. தேர்தலுக்கும், கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. அதை விட கொடுமையாக, ஒரு வேளை பீகாரில் பாஜக வெல்லாமல் போனால் தடுப்பு மருந்தே கொடுக்காமல் அலைய விட்டு விடுவார்களா என்ற அதிர்ச்சியான சந்தேகமும் கூடவே எழுகிறது.
நேபாளத்தில் பிரளயத்தை கிளப்பும் பிரதமர் ஒலி- இந்திய ரா தலைவர் சமந்த் குமார் கோயல் சந்திப்பு!
உலக பேரிடர்
கொரோனா என்பது உலகப் பேரிடர். உலகமே கூடி அதற்கு எதிராக போரிட்டுக் கொண்டுள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது எப்போது என்று எல்லோரும் அலைபாய்ந்து கொண்டுள்ளனர். மானிட குலத்துக்கே விடப்பட்டுள்ள மிகப் பெரிய சவால் இது. இந்த சவாலில் வெல்ல உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என ஹூவும் கூறி வருகிறது.
அரசியல்
இந்த நிலையில் இந்தியாவில் பாஜக இதை அரசியல்மயமாக்கியிருப்பது அதிர்ச்சி தருகிறது. பாஜக ஒரு சாதாரண கட்சி அல்ல. அது இந்த நாட்டை ஆளும் கட்சி. நாட்டு மக்களால் மிகப் பெரிய பெரும்பான்மை பலம் தரப்பட்டு ஆட்சிக் கட்டிலில் 2வது முறையாக அமர வைக்கப்பட்டுள்ள கட்சி. நரேந்திர மோடி என்ற மிகப் பெரிய ஜாம்பவானை தலைவராக கொண்ட அரசின் கட்சி. அப்படிப்பட்ட கட்சி கொரோனாவை தேர்தல் காலத்து பொருளாக மாற்றி சுருக்கியிருப்பது தவறான முன்னுதாரணமாகும்.
அபாயகரமானது
உண்மையில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதை நாடு முழுவதும் இலவசமாக மத்திய அரசு வழங்க வேண்டும். இந்திய அரசு மட்டுமல்ல, உலக நாடுகளும் கூட இதைத்தான்செய்ய வேண்டும். காரணம் இந்த நோய் உலகையே உருக்கி எடுக்கக் கூடியது. அப்படிப்பட்ட கொரோனாவுக்கு எதிரான போரில், தேர்தலில் ஜெயித்தால் இலவசம், இல்லாவிட்டால் இல்லை என்பது போல பேசுவது தவறானது, அபாயகரமானதும் கூட.
போலியோ
போலியோ சொட்டு மருந்து உலகம் முழுவதும் கொடுக்கப்படுகிறது. அதை இந்தியாவில் காங்கிரஸ் ஆண்ட அரசுகள்தான் கொடுக்க ஆரம்பித்தன. முற்றிலும் இலவசமாகவே தருகிறது அரசு. இன்று வரை அது தொடரவும் செய்கிறது. இதை யாரும் அரசியலாக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியாக சொன்னதும் இல்லை. காரணம், மக்களை காக்க வேண்டியது அரசின் கடமை என்பதால் போலியோ சொட்டு மருந்து அரசியலாக்கப்படவில்லை. ஆனால் கொரோனாவை அரசியலாக்கியிருப்பது மக்கள் மத்தியில் கேலிக்கூத்தாக மாறியுள்ளது.
அபத்தமானது
பாஜக இப்படிப்பட்ட ஒரு வாக்குறுதியை தந்திருக்கக் கூடாது. தவிர்த்திருக்க வேண்டும். காரணம், பீகாருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்துக்குமே அது இலவசமாக இந்த தடுப்புமருந்தை கொடுத்தாக வேண்டும். அது அதன் கடமையாகும். தேர்தலில் ஜெயித்தால் என்று சொல்வதே மிகவும் அபத்தமானது.. அப்படியானால் தோற்றால் என்ன செய்வார்கள்.. பீகார் மக்களுக்கு தடுப்பு மருந்தே தராமல் தண்டிப்பார்களா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.
விவாதம்
எனவே பாஜகவின் இந்த வாக்குறுதி கேலிக்குரியதாகவே அனைவராலும் பார்க்கப்படும். காங்கிரஸ் கட்சி இப்போதே இதை கடுமையாக விமர்சித்து விட்டது. அடுத்து மக்களும் கூட பல்வேறு வகையான விவாதத்தில் இறங்குவார்கள். எனவே எதையும் அறிவிப்பதற்கு முன்பு நூறு தடவை யோசித்துப் பார்த்து அறிவித்தால் அது மக்களுக்கு நல்லது. பாஜக பொறுப்பான ஒரு கட்சி, மத்தியில் ஆளும் கட்சி. அப்படிப்பட்ட கட்சி இப்படிப்பட்ட வாக்குறுதியை அளித்ததுதான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது.