ராகுல் ரகசியப் பயணம் மேற்கொள்வது ஏன்... பாஜக விமர்சனம்
டெல்லி: ராகுல்காந்தி எப்போதும் ரகசியப் பயணம் மேற்கொள்வது ஏன் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் இவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் இது தொடர்பாக இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது, ராகுலின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக விமர்சித்தார்.
ராகுல் தனது தொகுதிக்கு சென்றதை விட வெளிநாடுகளுக்கு சென்றது தான் அதிக முறை என அவர் விமர்சித்துள்ளார்.
ஃபரூக் அப்துல்லா மீது 27 வழக்குகள்.. வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு
விமர்சனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற விவரத்தை வெளியிடாமல் ரகசியமாக சென்றது தேசிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக கருத்து
மெடிடேஷனல் பயணமாக ராகுல் இந்தோனேஷியா சென்றிறுக்கக் கூடும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், பாஜக அதனை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் திடீர் திடீரென்று 16 முறை ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாகவும், அதில் 9 முறை எந்தெந்த நாடுகளுக்கு ராகுல் பயணித்தார் என்ற விவரத்தை கூட தெரிவிக்காமல் ரகசியம் காக்கப்படுவதாக பாஜக கூறியுள்ளது.
தோற்கடிப்பு
உத்திரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட காரணமே அவர் தொகுதியை கண்டுகொள்ளாமல் இருந்ததே என பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார். ராகுலின் செயல்பாடுகள் பிடிக்காததன் காரணமாகவே அமேதி மக்கள் அவரை தோற்கடித்ததாக தெரிவித்துள்ளார்.
சாடல்
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த தகவலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனை ராகுல் பின்பற்றுவதே கிடையாது என பாஜக சாடியுள்ளது.