ஒரு கண்ணில் வெண்ணெய்.. இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு.. பாஜகவின் பாரபட்சம்!
டெல்லி: நாதுராம் கோட்சேவை எந்த நேரத்தில் கமல் தொட்டாரோ, அது பாஜவை சுத்தி சுத்தி அடித்துக் கொண்டுள்ளது. கமல் பழுதில்லாமல் தப்பி விட்டார்.. ஆனால் பாஜகதான் படாதபாடு பட்டு வருகிறது.
தேசிய அளவில் பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது கோட்சே. ஒன்று, அக்கட்சியின் போபால் வேட்பாளர் சாத்வி பிரக்யா, கோட்சேவை தேசபக்தர் என்று கூறி காந்தியின் படுகொலையை இழிவுபடுத்தி விட்டார். மகாத்மா காந்தியை இதை விட யாராலும் இழிவுபடுத்த முடியாது என்று மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜக தலைமை பிரக்யாவைக் கண்டிக்க அவரும் மன்னிப்புகேட்டுள்ளார். ஆனால் தற்போது காந்தியை வைத்து புது சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் மத்தியப் பிரதேச பாஜக செய்தித் தொடர்பாளர் அனில் செளமித்ரா.
பேசுவதெல்லாம் தப்பு.. தப்பு மட்டுமே.. பாஜகவின் மாபெரும் தலைவலியாக மாறும் பிரக்யா!
|
தப்பான பேச்சு
மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தந்தை என்று கூறியுள்ளார் செளமித்ரா. இதனால் கட்சித் தலைமை கடுப்பாகி விட்டது. அதி வேகமாக செளமித்ராவை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்துள்ளது.
பிரக்யா மீது இல்லை
இப்படி செளமித்ரா மீது கட்சி காட்டிய வேகத்தை ஏன் காந்தியைக் கொன்றவனை தேசபக்தர் என்று கூறிய பிரக்யா மீது காட்டவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரக்யாவையம் கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏன் பாரபட்சம்
பிரக்யாவின் பேச்சை மன்னிக்க முடியாது என்று பிரதமர் மோடியே கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது பிரக்யா ஏன் சஸ்பெண்ட் செய்யப்படவில்லை என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. ஆனால் பாஜக தரப்பில் எந்த பதிலும் இல்லை.
நியாயம் இல்லை
காந்தியை பாகிஸ்தானின் தந்தை என்று கூறியவர் மீது அதி வேகமாக நடவடிக்கை எடுத்த பாஜக தலைமை, காந்தியைக் கொன்றவனை தேசபக்தர் என்று கூறிய பெண் சாமியார் மீதும் அதே கடுமையைக் காட்டியிருக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மக்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.