ரஃபேல் - ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பா.ஜ.க. நாளை நாடு தழுவிய போராட்டம்
Recommended Video
டெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் விவகாரத்தில் ராகுல் காந்தி பொய் கூறியதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
ரஃபேர் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு அளித்திருந்தது. இத்தீர்ப்புக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி உள்ளிட்டோர் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்களையும் உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும் ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை உச்சநீதிமன்றம் திருடர் என கூறியதாக ராகுல் பேசியதற்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் முடித்து வைக்கப்பட்டது.
சபரிமலை.. உச்சநீதிமன்றத்தின் முக்கியமான மாறுபட்ட கருத்தை அரசு படிக்க வேண்டும்.. நாரிமன் அதிரடி
இவ்வழக்கில் ராகுல் காந்தி மிகவும் எச்சரிக்கையுடன் பேச வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் கூறியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ரவிசங்கர் பிரசாத் இருவரும், நாட்டு மக்களிடம் பொய்யான தகவல்களை பரப்பிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் ராகுல் காந்தியோ, நீதிபதி ஜோசப் தீர்ப்பை முன்வைத்து, ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன்பாக இந்த போராட்டத்தை பாஜக நடத்த உள்ளது.