ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களை தலா ரூ.10 கோடிக்கு விலை பேசும் பாஜக..மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு
டெல்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் 7 பேருக்கு தலா ரூ.10 கோடி கொடுப்பதாக பாரதிய ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது என அக்கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இது பற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொடர்ந்து வளர்ச்சி அரசியல் பற்றி பேசி வரும் மோடி அதனை பின்பற்றுவதில்லை. மாறாக தனது கட்சியினரை குதிரை பேரத்தில் ஈடுபட வைத்து, பிற கட்சிகளை உடைக்கும் அரசியலில் தான் ஈடுபட்டு வருகிறார்.
மற்ற கட்சிகளை சிதைக்கும் வேலையை தான் பாரதிய ஜனதா செய்கிறது, ஏற்கனவே ஆம்ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களை குதிரை பேரத்திற்கு பணிய வைக்க பார்த்தது. ஆனால் அந்த முயற்சிகள் கைகூடவில்லை.
இந்நிலையில் தேர்தல் நேரத்தில் மீண்டும் குதிரை பேர முயற்சியில் அக்கட்சி ஈடுட்டுள்ளது. எங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 7 பேரை தனது குதிரை பேர வலைக்குள் சிக்க வைக்க பாரதிய ஜனதா தொடர்ந்து முயன்று வருகிறது.
ஒவ்வொரு எம்.எல்.ஏ-க்களுக்கும் தலா ரூ.10 கோடி வரை கொடுப்பதாக பாரதிய ஜனதா தூண்டில் போட்டுள்ளதாக மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
காங். என்னை கொல்ல கனவு காண்கிறது.. ஆனால் எனக்கு பின் ஒரு கூட்டமே உள்ளது.. மோடி பன்ச்!
இதற்கு முன் பாரதிய ஜனதா இத்தகைய செயலில் ஈடுபட்ட போது, மக்கள் தேர்தலில் உரிய பாடம் புகட்டினர். அது போலவே மீண்டுமொரு பாடத்தை பாரதிய ஜனதாவிற்கு கற்பிக்க மக்கள் தயாராகி வருவதாக கூறினார்.
ஆம் ஆத்மியின் இந்த குற்றச்சாட்டை டெல்லி மாநில பாரதிய ஜனதா மறுத்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அக்கட்சியின் டெல்லி மாநில செய்தி தொடர்பாளரான அசோக் கோயல், ஆம் ஆத்மி தோல்வி பயத்தில் உள்ளது. உட்கட்சி பூசலை சமாளிக்க முடியாமல் பாரதிய ஜனதா மீது, ஆம் ஆத்மி பழி போடுகிறது என கருத்து தெரிவித்துள்ளார்.