அதிகார பசியில் பாஜக...ம.பி.யில் காங். ஆட்சியை கவிழ்க்க சதி.. எம்.எல்.ஏக்களுக்கு ரூ. 30 கோடி பேரம்
டெல்லி: மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான அரசை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் எம்.எல்.ஏக்களை வளைப்பது, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைப்பது ஆகிய சித்து விளையாட்டுகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் கர்நாடகாவில் ஆட்சியையும் கைப்பற்றியது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் பாஜக எதிர்க்கட்சியாக அமர்ந்தது முதலே அக்கட்சியின் தலைவர்கள் சிவராஜ்சிங் சவுகான், நரோட்டம் மிஸ்ரா ஆகியோர் காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 15 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தை பாஜக சூறையாடிவிட்டது.
தற்போது அவர்களால் எதிர்க்கட்சி வரிசையில் உட்கார முடியாமல் தவிக்கின்றனர். இதனால் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு பேரம் பேசி வருகின்றனர் பாஜக தலைவர்கள். காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு ரூ25 கோடி முதல் ரூ30 கோடி வரை லஞ்சம் தருவதாக பேரம் பேசுகிறது பாஜக.
முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களுக்கு ரூ5 கோடி வழங்கப்படுமாம்; ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்தால் 2-வது கட்ட லஞ்ச பணம் கொடுக்கப்படுமாம்; நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கமல்நாத் ஆட்சியை கவிழ்த்தால் 3-வது கட்டமாக பணம் தரப்படுமாம். இப்படித்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு பாஜக பேரம் பேசி வருகிறது.
பாஜகவால் தொடர்பு கொள்ளப்பட்டு பேரம் பேசப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், கட்சித் தலைமையிடம் இத்தகவல்களை தெரிவித்திருக்கின்றனர். பாஜக தலைவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.. இது ஒன்றும் கர்நாடகா அல்ல. மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை உங்களால் விலைக்கு வாங்க முடியாது. பாஜகவின் இந்த போக்கை சகித்துக் கொள்ள முடியாது.
அந்த பக்கம் உலமாக்கள்.. இந்த பக்கம் பாஜக நாராயணன்.. சமாதான தூதுவராக மாறுகிறாரா ரஜினிகாந்த்?
பாஜகவில் சிவராஜ்சிங் சவுகானுக்கும் நரோட்டம் மிஸ்ராவுக்கும் இடையே யார் முதல்வராவது என்கிற அதிகாரப் போட்டி இருக்கிறது. தற்போது இருவரும் முதல்வர், துணை முதல்வர் பதவி என பங்கிட்டு கொள்வது என முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வாறு திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.