பாகிஸ்தான் ஐஎஸ்ஐ...பாலிவுட் பிரபலங்களுக்கு தொடர்பு...பாஜக எச்சரிக்கை!!
டெல்லி: பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்து இருக்கும் பாலிவுட் நட்சத்திரங்கள் தாங்களே முன் வந்து தங்களது தொடர்பை ஒப்புக் கொள்ள வேண்டும். இந்த நடிகர்களுடன் மற்ற பாலிவுட் நடிகர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்று பாஜக துணைத் தலைவர் பைஜயந்த் பாண்டா தெரிவித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாஜகவின் துணைத் தலைவராக இருக்கும் ஜெய் பாண்டா என்று அழைக்கப்படும் பைஜயந்த் ஜெய் பாண்டா ட்விட்டரில் ஒரு பதிவை இட்டுள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்தப் பதிவில், ''ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டுபவர்களுடன் பாலிவுட் பிரபலங்கள் நட்பு வைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் பாகிஸ்தானியர்கள் அல்லது வெளிநாட்டில் வாழும் இந்தியர்களாக உள்ளனர். அவர்களுடன் வர்த்தக தொடர்பிலும் உள்ளனர். அதற்கான ஆவணங்களும் கிடைத்துள்ளன. இவர்கள் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடனும் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளனர். இவர்களுடன் தேச பக்தி கொண்ட பாலிவுட்கார்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது'' என்று எச்சரித்துள்ளார்.
டோனி, ஷாரூக் கான் தொடர்பு
இவர் தனது டிவிட்டர் பதிவில் யாருடையே பெயரையும் வெளிப்படையாக குறிப்பிடவில்லை. ஆனால், இவரது ட்விட்டரை பின் தொடரும் ஸ்ரீநகரைச் சேர்ந்த அல் இஸ்கந்தர் என்பவர் பதில் அளித்து இருக்கிறார். அதே தொடர்பில் அல் ஸ்கந்தர் அளித்திருக்கும் பதிலில், ''பாலிவுட் நடிகர் ஷாரூக் கானுக்கும் அமெரிக்காவில் இருக்கும் காஷ்மீரைச் சேர்ந்த டோனி ஆஷாய்க்கும் தொடர்பு உள்ளது. பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறியுமாறு இந்த டோனி தான் பதிவிட்டு இருந்தார். கலிபோர்னியாவில் சகல வசதிகளும் கொண்ட அறையில் அமர்ந்து கொண்டு காஷ்மீர் இளைஞர்களை தூண்டி விடுகிறார்'' என்று பதிவிட்டு இருந்தார்.
அவரது பதிவில் காஷ்மீர் இளைஞர்களை தூண்டும் விதமான டோனியின் ட்விட்டர் பதிவையும் அல் இஸ்கந்தர் சேர்த்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
கலிபோர்னியாவில் டோனி
கலிபோர்னியாவில் டோனி வசித்து வருகிறார். இவர் கட்டிட கலை நிபுணராக இருந்து வருகிறார். சண்டிகரில் இளங்கலை பட்டம் முடித்து முதுகலை படிப்பிற்காக அமெரிக்காவுக்கு டோனி சென்றார். அப்படியே அங்கு தங்கி விட்டார். இம்ரான் கானுடன் டோனி இருக்கும் புகைப்படத்தை அல் ஸ்கந்தர் பதிவிட்டுள்ளார். டோனியின் ட்விட்டர் பக்கத்திலும் உள்ளது. மேலும், அவரது டிவிட்டர் பக்கத்தில் டோனியை இம்ரான் கான் புகழும் வாசகங்களும் இடம் பெற்றுள்ளான. பாகிஸ்தானுக்கு இவர் அனைத்து உதவிகளும் செய்வதை பதிவிட்டுள்ளார். இந்த டோனியை ஷாரூக்கானின் மனைவி கவுரி கான் சந்தித்து இருக்கும் புகைப்படமும் வெளியாகி இருக்கிறது.
காஷ்மீர் பண்டிட்கள் கொலை
இதுமட்டுமில்லை, ஜம்மு காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி அமைப்பில் உறுப்பினராக இருக்கிறார் டோனி என்று அல் ஸ்கந்தர் குறிப்பிட்டுள்ளார். மேலும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த அமைப்புதான் 1990களில் காஷ்மீர் பண்டிட்களை கொல்வதற்கு காரணமாக இருந்தவர்கள். இன்று ஷாரூக் கான் மற்றும் அவரது மனைவி கவுரி கானுடன் டோனி தொடர்பில் இருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இம்ரானுடன் டோனிக்கு தொடர்பு
மற்றொரு ட்வீட்டில், ''ஷாரூக் கான் மிகவும் தேசபக்தர். ஆனால், அவருக்கு ஐஎஸ்ஐ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் டோனிக்கு தொடர்பு இருப்பது தெரியவில்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் சிலர் தங்களது பதிவுகளையும் இட்டுள்ளனர். அப்படியான ஒரு பதிவில், பாகிஸ்தானில் பிறந்து பிரிட்டனில் தொழில் செய்து வரும் அனில் முஸாரத்தின் மகள் திருமணம் 2017ல் லண்டனில் நடந்தது. அப்போது இந்த திருமணத்தில் ஹிருத்திக் ரோஷன், ரன்வீர் சிங், அனில் கபூர், சனம் கபூர், கரண் ஜோஹர், சுனில் ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்ட பதிவையும் இட்டுள்ளனர்.