காசிக்கு டாட்டா.. பூரிக்கு இடம் மாறுகிறாரா மோடி.. பரபரக்கும் பாஜக உத்திகள்
பூரி தொகுதியில் இந்த முறை போட்டியிட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடியின் அடுத்த குறி எங்கே தெரியுமா? வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒடிசாவின் பூரியைதான் அவர் குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
5 மாநில தேர்தல் முடிவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது பாஜக. அதிலிருந்து மீண்டு வரும் லோக்சபா தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்க வைக்க தேவையான உத்திகளில் பாஜக குதித்துள்ளது.
கூட்டணி சம்பந்தமான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, பிரச்சாரங்களின் டைம்-டேபிள் என பிளான்கள் பக்காவாக நடைபெற்று வருகின்றன.
வாரணாசி
ஆளாளுக்கு ஒவ்வொரு தொகுதியில் நின்று போட்டியிட்டாலும், மோடி எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பதைதான் நாடே உற்று நோக்கும். போன முறை வாரணாசியிலும், வதோதராவிலும் போட்டியிட்டார். கடைசியில் பார்த்தால் இரண்டிலுமே ஜெயித்துவிட, வதோதரா பதவியை விட்டுவிட்டு, வாரணாசி எம்பி பதவியை இறுக்கி கெட்டியாக பிடித்து கொண்டார்.
தெய்வீக நகரம்
இந்த முறையும் சென்டிமென்ட்டுக்காக வாரணாசியிலேயே போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் அவர் வேறு மாநிலத்திற்கு மாறப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மோடிக்கு, ஒடிசாவில் உள்ள பூரியை பாஜக தேர்ந்தெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. எதற்காக பூரியை மோடி தேர்ந்தெடுக்க வேண்டும்? வாரணாசி போன்று இதுவும் ஒரு தெய்வீகமான நகரம்தான். உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயில் அமைந்துள்ளது.
தனி ரூட் - பட்நாயக்
இது ஒரு சென்டிமென்ட் காரணம் என்று வைத்து கொண்டாலும், அரசியல் காரணமாக பார்த்தால், ஒடிசாவில் நவீன் பட்நாயக் ஆட்சி நடக்கிறது. இவர் இடமும் போகாமல், வலமும் போகாமல் உள்ளவர். அதாவது காங்கிரஸ், பாஜக என்றில்லாமல் தனி ரூட்டில் ஆட்சியை நடத்தி வருபவர். இந்தவிஷயத்தைதான் மோடி தனக்கு சாதகமாக மாற்ற போகிறார். தனக்கு ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, காங்கிரசை முழுசா ஆதரிக்கவில்லை என்பதுதான் பாஜகவுக்கு இப்போதைய டானிக். அதனால் நவீனுடன் கை கோர்த்து ஆட்சியை பிடிக்கவும் மோடி பிளான் செய்து வருவதாக சொல்லப்படுகிறது.
இந்துக்கள் நிறைந்த பூரி
மற்றொரு காரணம், கடந்த தேர்தலின்போது ஒடிஷாவில் மொத்தம் உள்ள 21 இடங்களில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக ஜெயித்தது. அதனால் பாஜக செல்வாக்கு பெற்ற மாநிலமான வாரணாசியைவிட, பலம் இழந்த பூரி போன்ற தொகுதியை தேர்ந்தெடுக்க காரணமாகவும் கூறப்படுகிறது. அடுத்த காரணமாக, இந்துக்கள் நிறைந்த பூரி தொகுதியில் நிற்பது தமக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மோடி நிறையவே நம்புகிறாராம்.
மாநில மொழிகள்
அது மட்டும் இல்லை.. வரும் தேர்தலில் இந்தி பேசும் மாநிலங்களை தவிர மாநில மொழி பேசும் மாநிலங்களிலும் தனது செல்வாக்கை காட்ட வேண்டும் என்று பாஜக முடிவு செய்துள்ளது நான்காவது காரணமாக சொல்லப்படுகிறது. அதனால்தான் ஒடிசா மாநிலம் பூரி தொகுதியை மோடி தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜெகநாதர் ஆசி
எல்லாவற்றிற்கும் மேலாக, பூரியில் மோடி போட்டியிட்டால், வெற்றி பெற 90 சதவீத வாய்ப்புள்ளது என்று அக்கட்சி கருதுவதுடன், பூரி ஜெகநாதர் ஆசியுடன் அத்தொகுதியில் போட்டியிட்டு மோடி வெற்றி பெறுவார் என்று பாஜக மூத்த தலைகளே நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.