ஜார்கண்டில் ஆட்சியை இழக்கும் பாஜக.. காங். கூட்டணி அமோக வெற்றி.. சொல்வது ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல்
டெல்லி: ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சியை இழக்கிறது என்று, ரிபப்ளிக் டிவி எக்ஸிட் போல் தெரிவிக்கிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 30ம் தேதி துவங்கிய தேர்தல் டிசம்பர் 20ம் தேதிவரை 5 கட்டங்களாக நடைபெற்றது. ஜார்கண்டில், பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்கும் உத்வேகத்துடன், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
ஆட்சியை பாஜகவிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் சூறாவளி பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில்தான், தேர்தல் முடிவுகள் டிசம்பர் 23ம் தேதி வெளியாகிறது.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, குடியுரிமை சட்டத் திருத்தம், வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றம் போன்ற, நாடு முழுமைக்குமான பற்றி எரியும் தீவிர பிரச்சினைகளுக்கு நடுவே நடைபெற்ற தேர்தல் இது. நேற்றுடன் இறுதிகட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மாலை 6 .30 மணிக்கு மேல் பல்வேறு ஏஜென்சிகளின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின. இன்று ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
வாவ்.. ரூ.2 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி.. உத்தவ் தாக்ரே அதிரடி அறிவிப்பு
அதில் கூறியுள்ளதாவது: பாஜக 22-30 தொகுதிகளை வெல்ல கூடும். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 23-28 தொகுதிகளை வெல்லும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் 10-15 தொகுதிகளை வெல்லக் கூடும். இவ்வாறு அந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. ஆட்சியமைக்க 41 எம்எல்ஏக்கள் பலமாவது தேவை என்பதால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாகவே ரிபப்ளிக் டிவியும் தெரிவித்துள்ளது.
நேற்று இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா உள்ளிட்ட வேறு பல எக்ஸிட் போல்களும், பாஜக ஜார்கண்டில் ஆட்சியை இழக்கப்போகிறது என்றே தெரிவித்திருந்தது.