மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி: நன்றி குஜராத்..சேவை செய்ய வாய்ப்பு - மோடி நெகிழ்ச்சி
குஜராத் மாநில மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்
டெல்லி: குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதற்கு நன்றி கூறி பிரதமர் மோடி நெகிழ்ச்சியான பதிவிட்டுள்ளார். மிக்க நன்றி குஜராத்! மாநிலம் முழுவதும் நடந்த மாநகராட்சி தேர்தலில் பெரும் வெற்றியை மக்கள் வழங்கியுள்ளனர். பாஜக மீது மக்கள் மீண்டும் பெரிய அளவில் நம்பிக்கை வைத்துள்ளனர். குஜராத்திற்கு சேவை செய்ய வாய்ப்பளித்துள்ளனர் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. பாஜக மாநிலம் முழுவதும் மாநகராட்சிகளில் பல வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகவே இந்த மாநகராட்சிகள் பாஜக வசம் இருந்து வருகிறது. இந்தமுறை நடைபெற்ற தேர்தலிலும் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு நன்றி கூறியுள்ள பிரதமர் மோடி இந்த வெற்றி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
|
பாஜகவிற்கு ஆதரவு
குஜராத்தின் ஒவ்வொரு மூலையிலும் இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி இத்தகைய அற்புதமான வெற்றியை அடைவது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். சமூகத்தின் அனைத்து தரப்பினரிடமிருந்தும், குறிப்பாக குஜராத்தின் இளைஞர்களிடமிருந்து பாஜகவிற்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
|
முயற்சிக்கு பாராட்டு
குஜராத் மாநிலம் முழுவதும் உள்ள மக்களைச் சந்தித்து கட்சியின் நோக்கம் செயல்பாடுகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஒவ்வொரு ஆர்வலரின் முயற்சியையும் நான் பாராட்டுகிறேன். குஜராத் அரசாங்கத்தின் பொது நலக் கொள்கைகள் மாநிலத்தில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன என்றும் பதிவிட்டுள்ளார்.
வாரி சுருட்டிய பாஜக
குஜராத்தில் 6 மாநகராட்சிகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 576 வார்டுகளில் ஆளும் பாஜக 409 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 33 வார்டுகளில் மட்டுமே வென்றுள்ளது. இதர கட்சிகள் 31 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. இந்த வெற்றி பிரதமர் மோடியை நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது.
|
சேவை செய்ய மீண்டும் வாய்ப்பு
நன்றி குஜராத்! மாநிலம் முழுவதும் உள்ள நகராட்சித் தேர்தல்களின் முடிவுகள், மக்கள் அபிவிருத்தி மற்றும் நல்லாட்சியின் அரசியலில் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளன என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. பாஜக மீதான நம்பிக்கையை மீண்டும் வெளிப்படுத்திய மாநில மக்களுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். குஜராத் மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி என்றும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.