இலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்?
டெல்லி: தெற்காசியாவில் விஸ்வரூபமெடுத்து நிற்க விரும்பும் சீனாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் அந்நாட்டின் விஞ்ஞானிகள்,. பொருளாதார வல்லுநர்களை இலக்கு வைத்து தீவிரவாத குழுக்கள் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. தெற்காசியாவில் சீனாவின் அடுத்த கட்ட நகர்வுகளைத் தடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளின் திட்டமிடலுடன் இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
இலங்கையில் ஈஸ்டர் நாளன்று தொடர் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 359 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இத்தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் புலனாய்வு அதிகாரிகள் இலங்கையில் முகாமிட்டனர். அதேநேரத்தில் சீனாவைச் சேர்ந்த இயற்கை எரிவாயு ஆராய்ச்சி விஞ்ஞானிகள் 4 பேர், ஈஸ்டர் நாள் தாக்குதலில் கொல்லப்பட்டிருந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
மேக மூட்டம்.. ரேடாரில் சிக்க மாட்டோம்.. பாலக்கோடு தாக்குதல் பற்றி விளக்கிய மோடி.. சர்ச்சை!
சீன விஞ்ஞானிகளுக்கு குறி
சீன விஞ்ஞானிகள் தங்கியிருந்த ஹோட்டலில் இலங்கை- சீனா இடையே இயற்கை எரிவாயு, எண்ணெய் வளம் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வது தொடர்பான கருத்தரங்கம் ஒன்றும் நடைபெற இருந்தது. இதனால் சீனா விஞ்ஞானிகளையும் இலக்கு வைத்தே ஈஸ்டர் நாள் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஏனெனில் ஏற்கனவே நார்வேதான் இலங்கையில் எரிவாயு வளம் இருப்பதை முதலில் கண்டறிந்தது. இதனை அடுத்த கட்டமாக ஆய்வு செய்ய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் காத்திருந்தன. ஆனால் இலங்கையோ சீனாவுக்கு இயற்கை எரிவாயு ஆய்வுக்கான ஒப்பந்தத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் சீனா வல்லுநர்களுக்கு குறி
இந்நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் கவ்தார் துறைமுக நகரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்கிற தீவிரவாத அமைப்பு தாக்கியுள்ளது. கவ்தாரின் பேர்ல் கான்டினெண்டல் ஹோட்டலில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சீனாவின் மேலாதிக்கம்
கவ்தார் துறைமுகம் தெற்காசிய பிராந்தியத்தில் மிக முக்கியத்துவமான ஒன்றாகும். இத்துறைமுகத்தை சீனா விரிவாக்கம் செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து கவ்தார் துறைமுகத்தில் சேமித்து இங்கிருந்து பலுசிஸ்தான் மாகாணத்தின் பல நகரங்கள் வழியே தமது நாட்டின் நகரங்களை ரயில் பாதை மூலம் இணைத்துள்ளது சீனா. கவ்தார் துறைமுகத்தை சீனா கைப்பற்றியதன் நோக்கமே அரபிக் கடலில் இந்தியாவுக்கு சவால்விடும் வகையில் நிலை கொள்ளும் நோக்கம்தான். சீனாவின் 'துறைமுக நகரங்களை' இணைக்கும் முத்துமாலை திட்டத்தில் கவ்தார் நகருக்கும் பிரதான பங்கு இருக்கிறது.
கவ்தாரும் இந்தியாவும்
இதனால்தான் கவ்தார் துறைமுகத்துக்கு அருகே ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியா கையிலெடுத்தது. ஈரான், ஆப்கானிஸ்தானுடனான வர்த்தக உறவுகள், அபிவிருத்திப் பணிகளுக்கு சபாஹர் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்தி வருகிறது. இதனால் அங்கு எப்போதும் ஒரு சர்வதேச பதற்றம் நிலவி வருகிறது.
சீனா டென்சன்
இந்த பின்னணியில் தற்போது கவ்தார் துறைமுக நகரில் சீனா வல்லுநர்கள் தங்கியிருந்த ஹோட்டல் இலக்கு வைத்து தாக்கப்பட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்றுள்ள பலுசிஸ்தான் ராணுவம் ஏற்கனவே கராச்சியில் உள்ள சீனா தூதரகத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது. தற்போது கவ்தார் துறைமுக நகரில் தாக்குதல் நடத்தப்பட்ட உடனேயே பாகிஸ்தானில் உள்ள சீனா தூதரகம் கடும் கண்டனத்தை வெளியிட்டு தன்னுடைய பதற்றத்தை தெரிவித்துள்ளது. இப்படி இலங்கை, பாகிஸ்தானில் தொடர்ந்து சீனா விஞ்ஞானிகள், வல்லுநர்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதன் பின்னணியில் தீவிரவாத குழுக்கள் மட்டுமின்றி சர்வதேச நாடுகளின் பங்களிப்பும் இருப்பதை மறுப்பதற்கே வாய்ப்பு இல்லை என்கின்றனர் தென்னாசிய அரசியல் வல்லுநர்கள்.