காஷ்மீர் பாணியில் ஒடிஷா, மே.வங்கம், தமிழ்நாட்டையும் பிரிப்பீர்களா? ப.சிதம்பரம் தாக்கு
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பாணியில் ஒடிஷா, மேற்கு வங்கம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களையும் மத்திய அரசு பிரிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; ஜம்மு காஷ்மீருக்கான 370-வது பிரிவை ரத்து செய்திருப்பதும் மாநிலத்தை பிரித்திருப்பதும் மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார்.
ராஜ்யசபாவில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான மத்திய அரசின் மசோதாக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ப. சிதம்பரம் பேசியதாவது:
மிகப்பெரிய தவறை இந்த சபை இன்று செய்துள்ளது; எதிர்கால சந்ததியினருக்காக, நான் உங்களிடம் வேண்டுகோள் வைக்கிறேன். ஜம்மு காஷ்மீரை வல்லபாய் பட்டேல், கோபால் அய்யங்கார், மகாராஜா ஹரிசிங் உள்ளிட்டொஒர் பெரும்பாடுபட்டு இந்தியாவுடன் இணைத்தனர். ஜம்மு காஷ்மீரின் பெரும்பான்மை மக்கள் பிரிவினையை விரும்பவில்லை.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவை மாற்றவே முடியாது. மத்திய அரசின் 370-வது பிரிவு ரத்து நடவடிக்கையானது காஷ்மீரில் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.
எதிர்காலம் தீர்மானிக்கும்
காஷ்மீர் விவகாரத்தில் வெற்றி பெற்றதாக பாஜக அரசு நினைத்துக்கொண்டிருக்கிறது, ஆனால் பாஜக அரசு தோற்றுவிட்டது என்பதை வரலாறு நிரூபிக்கும். இந்திய அரசியல் சாசன வரலாற்றில் இன்றைய தினம் துக்க தினம்.
ஒன்றிய அரசை சிதைக்கும் மத்திய அரசு
சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான காஷ்மீர் இளைஞர்கள் திசை மாறுகிற அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநிலங்கள் இணைந்த இந்திய ஒன்றியம் என்கிற அமைப்பையே பாஜக சிதைக்கிறது.
மாநில உரிமைகள் முக்கியம்
மாநிலங்களை நகராட்சி நிர்வாகங்கள் போல பாஜக மாற்றுகிறது. மாநிலங்களின் உரிமையை பாதுகாக்க வேண்டியதுதான் மாநிலங்களவையின் கடமை. மக்களின் உரிமையை காக்க வேண்டியது அரசின் மிகப்பெரிய கடமை.
தமிழகத்தை பிரித்தாலும் தடுக்க முடியாது
ஜம்மு காஷ்மீர் மாநிலம் துண்டாடப்படுவது மிகவும் கண்டனத்துக்குரியது. இதே சட்டத்தைப் பயன்படுத்தி பிற மாநிலங்களையும் நீங்கள் பிரிக்கக் கூடும். ஒடிஷா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை நீங்கள் பிரிப்பதை எந்த ஒரு சக்தியாலும் தடுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது. இதர மாநிலங்களுக்கு மிக மோசமான முன்னுதாரணத்தை மத்திய அரசு உருவாக்கிவிட்டடது. இவ்வாறு சிதம்பரம் கூறினார்.