கொரோனா மரணங்களிலும் காசு பார்க்கும் கள்ளச் சந்தை...எகிறும் ரெம்டெசிவியர் மருந்து விலை...!!
டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, இறப்பு விகிதமும் சற்று அதிகரித்து வருவது மக்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் ரெம்டெசிவியர் மருந்து கள்ள சந்தையில் ரூ. 60,000 வரை விற்கப்பட்டு வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன. இந்த மருந்தின் உண்மை விலை ரூ. 4000தான்.
Recommended Video
கொரோனா வைரஸை குணப்படுத்த இதுவரை எந்த மருந்தும் இல்லை. கட்டுப்படுத்தும் என்று சில மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று ரெம்டெசிவியர். இந்த மருந்து கட்டுப்படுத்தும் என்று பரிசோதனை அடிப்படையில் தெரிய வந்தாலும், மீண்டும் இந்த மருந்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையும் எழுந்துள்ளது. இந்த மருந்து கொரோனாவை கட்டுப்படுத்தும் என்று துவக்கத்தில் அமெரிக்க ஆய்வுகள் தெரிவித்து இருந்தன. மேலும், கொரோனா இறப்பை கட்டுப்படுத்துகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதையடுத்து கிலியட் நிறுவனத்தின் தயாரிப்பான ரெம்டெசிவியர்க்கு உலகம் முழுவதும் கிராக்கி ஏற்பட்டது. இந்தியாவும் இந்த மருந்தை இறக்குமதி செய்துள்ளது. தற்போது இந்த கிலியட் நிறுவனத்தின் கீழ் ரெம்டெசிவியர் என்றும், சிப்லாவின் கீழ் சிப்ரெமி என்றும், ஹெட்ரோவின் கீழ் கோவிஃபார் என்றும், மிலன் சார்பில் டெஸ்ரெம்டிம் என்ற பெயரிலும் வெளி வருகிறது. இந்த, மருந்தின் உண்மை விலை ரூ. 4000 முதல் ரூ. 5,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்திய மருந்து ஆணையம் ரெம்டெசிவியர் மருந்தை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது. ஆனாலும், இன்னும் இறக்குமதியாகவில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் இந்த மருந்தை உள்நாட்டில் தயாரிக்க மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை அவசர தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த மருந்து டெல்லி போன்ற இடங்களில் அநியாய விலைக்கு கள்ளச் சந்தையில் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் விஜி சோமணிக்கு புகார் கடிதம் சென்றுள்ளது. இதையடுத்து, அவசரத்திற்கு மட்டுமே இந்த மருந்தை பயன்படுத்த வேண்டும். கள்ளச் சந்தையில் விற்பதை தடுக்க வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு ஆணையங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தற்போது வேறு வேறு பெயர்களில் விற்கப்படும் ரெம்டெசிவியர் மருந்துக்கு பெரிய அளவில் தட்டுப்பாடு இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும்போது, கள்ளச் சந்தையில் விற்பது கவலையை அளித்துள்ளது. மாநில அரசுகள் இதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில்தான் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரெம்டெசிவியர் மருந்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
சூப்பர் தாராவி...கொரோனாவை புகழ்ந்து தள்ளிய உலக சுகாதார அமைப்பு!!
இந்த மருந்து ஒன்றுக்கு சிப்லா ரூ. 4000 நிர்ணயித்துள்ளது. ஆனால், மருந்து ஒன்றுக்கு மிலன் ரூ. 4,800 நிர்ணயித்துள்ளது. வரும் ஜூலை 22-24 ஆகிய தேதிகளில் இந்த மருந்தை கொண்டு வருவதற்கு மிலன் முயற்சித்து வருகிறது. மாதம் ஒன்றுக்கு மிலன் 2,70,000 மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த மாத இறுதியில் 20,000 ரெம்டெசிவியர் மருந்து தயாரிக்கப்படும் என்று இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.