பாக்.எல்லையில் முறைகேடாக நிலம் விற்பனை… வதேராவின் ரூ.4.62 கோடி சொத்துகள் முடக்கம்
டெல்லி:நில மோசடி வழக்கில் சிக்கியுள்ள ராபர்ட் வதேராவின் ரூ.4.62 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்திய-பாகிஸ்தான் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ள பதற்றமான இடத்தை வதேராவின் நிறுவனம் ஒதுக்கீடு பெற்றதாக, அப்பகுதி வட்டாட்சியர், காவல் துறையில் புகாரளித்திருந்தார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ராஜஸ்தான் காவல் துறையினர், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அமலாக்கத் துறை தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. அப்போது, வதேராவின் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் முறைகேடு செய்து குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கியது அம்பலமானது.
பின்னர், வதேராவின் நிறுவனம், அந்த இடத்தை பன்மடங்கு கூடுதல் விலைக்கு மற்றொரு நிறுவனத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.விசாரணை முடிவடைந்த நிலையில், கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வதேராவுக்குச் சொந்தமான சொத்துகளை முடக்க உத்தரவிடப்பட்டது.
அதன் படி, டெல்லியில் உள்ள ரூ.4.43 கோடி சொத்து உள்பட அவருக்குச் சொந்தமான நிறுவனத்தின் ரூ.4.62 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளன.முன்னதாக, நில விற்பனையில் பண மோசடி நிகழ்ந்துள்ளதாக கூறி அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அந்த வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற உத்தரவின் படி, ஜெயப்பூரில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், வதேரா மற்றும் அவரது தாய் மவுரீன் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.