27 ஆண்டுகளில் 3-வது போடோலாந்து ஒப்பந்தம்.. முடிவுக்கு வருமா தனிமாநிலத்துக்கான ஆயுத போராட்டம்?
டெல்லி: அஸ்ஸாமில் போடோ இன மக்களுக்காக தனி மாநிலம் கோரும் தீவிரவாத அமைப்பினருடன் மத்திய அரசு முத்தரப்பு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. 27 ஆண்டுகளில் மத்திய அரசு உருவாக்கியுள்ள இந்த 3-வது ஒப்பந்தமாவது போடோலாந்து தனி மாநிலம் கோரி நடைபெறும் ஆயுத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா நதியின் வடபகுதிகளை ஒருங்கிணைத்து போடோலாந்து என்கிற தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்பது போடோ இன மக்களின் கோரிக்கை. இதற்காக பல்வேறு ஆயுத குழுக்களும் மத்திய அரசுக்கு எதிராக போராடி வருகின்றன.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் 1993-ம் ஆண்டு முதலாவது போடோலாந்து ஒப்பந்தத்தை மத்திய அரசு உருவாக்கியது. மத்திய அரசு, அஸ்ஸாம் மாநில அரசு மற்றும் போடோ மக்கள் செயற்பாட்டு கமிட்டி ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி போடோலாந்து சுயாட்சி கவுன்சில் அமைக்கப்பட்டு அதற்கு 30-க்கும் மேற்பட்ட துறைகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது.
போடோலாந்து விடுதலைப் புலிகள்
ஆனால் போடோ இன மக்கள் இதில் திருப்தி அடையவில்லை. இதனால் போடோலாந்து விடுதலைப் புலிகள் என்ற ஆயுதம் தாங்கிய அமைப்பு 1996-ல் உதயமானது. பின்னர் போடோலாந்து விடுதலைப் புலிகளுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் விளைவாக 2003-ம் ஆண்டு மத்திய அரசுடன் 2-வது போடோலாந்து ஒப்பந்தம் கையெழுத்தானது.
புதிய கவுன்சில் அமைப்பு
அப்போது 2,641 போடோலாந்து விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். பெரும்பாலான போடோலாந்து விடுதலைப் புலிகள், மத்திய ரிசர்வ் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இந்த 2-வது ஒப்பந்தத்தின் படி போடோலாந்து பிராந்திய கவுன்சில் ஒன்று உருவாக்கப்பட்டது. முந்தைய போடோலாந்து சுயாட்சி கவுன்சிலைவிட இது கூடுதல் அதிகாரங்களை கொண்டதாக அமைக்கப்பட்டது.
போடோக்கள் மீண்டும் போராட்டம்
அஸ்ஸாமின் கோக்ராஜ்கர், சிராங், உடல்குரி மற்றும் பஸ்கா மாவட்டங்களின் 3,082 கிராமங்க்கள் இந்த பிராந்திய கவுன்சிலில் இணைக்கப்பட்டன. ஆனாலும் போடோ இன மக்களின் போராட்டம் ஓயவில்லை. போடோலாந்து தனிமாநிலம் கோரி அனைத்து போடோ மாணவர் ஒன்றியம் (ஏபிஎஸ்யூ) போராட்டங்களை தீவிரமாக நடத்தியது. இதையடுத்து போடோ தனிமாநிலம் கோரிய ஏபிஎஸ்யூ, என்டிபிஎஃப்பி ஆகியவற்றுடன் மத்திய அரசு பல சுற்றுப் பேச்சுகளை நடத்தியது.
3-வது போடோலாந்து ஒப்பந்ந்தம்
இதன்விளைவாகத்தான் நேற்று 3-வது போடோலாந்து ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. 2-வது போடோலாந்து ஒப்பந்தப்படி உருவாக்கப்பட்ட போடோலாந்து பிராந்திய கவுன்சில் என்பது தற்போது போடோலாந்து பிராந்திய பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது 60 உறுப்பினர்களை கொண்டதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய போடோலாந்து ஒப்பந்தத்தை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் என்கின்றனர். இருப்பினும் இந்த போடோலாந்து அமைதி ஒப்பந்தம் 2020-ல் உறுதி அளிக்கப்பட்ட ஷரத்துகளை மத்திய அரசு முழுமையாக செயல்படுத்த வேண்டும். இல்லையெனில் மீண்டும் போடோ இன மக்கள் கிளர்ச்சியில் இறங்குவார்கள் என்பது கடந்த காலங்களின் வரலாறு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.