பதற வைத்த டெல்லி பள்ளி பாய்ஸ் லாக்கர் ரூம்.. சக மாணவிகளை இப்படியா? வெளியில் சொல்லவே கூசும் சம்பவம்
டெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஒரு பள்ளியில், மாணவர்கள் கூட்டாக சேர்ந்து, இன்ஸ்டாகிராம் குரூப் உருவாக்கி, சக மாணவிகளை பற்றி வக்கிரத்தை கொட்டி தீர்த்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
தலைநகர் டெல்லியில் பணக்காரர்கள் படிக்கக்கூடிய ஒரு பள்ளியை சேர்ந்த 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களுக்கென்று, Bois Locker Room என்ற பெயரில் ஒரு இன்ஸ்டாகிராம் குரூப் ஆரம்பித்துள்ளனர்.
இந்த குரூப் கல்வி கற்பதற்காகவோ, பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்காகவோ இல்லை. தங்களிடமுள்ள புகைப்பட திறமைகளை வளர்த்து கொள்வதற்காகவும் அல்ல.
வக்கிர கமெண்ட்கள்
தங்களுடன் படிக்கக்கூடிய சக மாணவிகள் பற்றி ஆபாச கமெண்ட் அடிக்கவும், அவர்களின் ஆபாச படங்களை பதிவேற்றி அதுபற்றி வக்கிரமாக விவாதித்து இன்பம் அடைவதற்குத்தான் இந்த குரூப் பயன்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராம் குரூப்பில் சக மாணவிகள் பற்றி ஒரு மாணவர் ஆபாச கமெண்ட் அடிக்க.. அதற்கு பிற மாணவர்களும் சேர்ந்து கொண்டு தங்களது மனதிலுள்ள வக்கிர ஆசைகளை, தாங்களும் கமெண்ட் மூலமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
கூட்டு பலாத்காரம்
இதன் உச்சக்கட்டமாக, சில மாணவிகளை பற்றி பேசும்போது, இந்த மாணவியை நாம் அனைவரும் சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்யலாம் என்று கூறிய அதிர்ச்சிகர வார்த்தைகளும் அந்த சாட்டிங்கில் இடம்பெற்றுள்ளன. இதற்கு நான் ரெடி, நீ ரெடி என சில மாணவர்கள் பதில் கமெண்ட் செய்ததையும் பார்க்க முடிந்தது.
கவர்ச்சி போட்டோக்கள்
வெறும் பேச்சோடு மட்டுமின்றி, மாணவிகளின் புகைப்படத்தை, ஆபாச வலைத்தளத்தில் உள்ள புகைப்படத்துடன் இணைத்து, அதை பதிவேற்றம் செய்து நிர்வாண போட்டோக்களாகவும், கவர்ச்சி போட்டோக்களாகவும், உருவாக்கி, மாணவிகளை பார்த்து வக்கிர கமெண்ட் அடித்து பேசியுள்ளனர். இந்த குரூப் இவ்வாறு வக்கிரமாக நடந்து கொண்டதைப் பற்றி, இப்போது வெளி உலகத்துக்கு தெரிய வந்துள்ளது. குரூப் உரையாடல் பற்றிய ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தளத்தில் வெளியானதால்தான் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.
பாயும் நடவடிக்கை
இதுதொடர்பாக #boyslockeroom என்ற பெயரில் ட்விட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு, இந்த மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பட்ட பெண்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். டெல்லி சைபர் கிரைம் துணை போலீஸ் கமிஷனர் இதுபற்றி கூறுகையில் அந்த குழுவில் மெம்பர்கள், நிர்வாகிகள் அவர்கள் பெயர் மற்றும் ஐபி முகவரி போன்றவற்றை இன்ஸ்டாகிராம் நிறுவனத்திடம் கேட்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக டெல்லி மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் இதுபற்றி விசாரணை நடத்த டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதையடுத்துதான் இந்த விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தேவை அறம்
டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு, அந்த வழக்கு தொடர்பாக குற்றவாளிகளுக்கு சமீபத்தில்தான், திகார் சிறையில் தூக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. அப்படி இருக்கும்போது, கூட்டு பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த இந்த விஷயம், வெறும் கல்வி மட்டும் போதாது, இளம் தலைமுறைக்கு, அறம் கற்பிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.