மாஸ்கோ பேச்சு முன்... லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவம் இடையே சரமாரி துப்பாக்கிச் சூடு!
டெல்லி: ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கு முன்னதாக கிழக்கு லடாக்கின் பாங்கோங் த்சோ ஏரியில் இந்தியா- சீனா ராணுவத்தினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகளை மேற்கோள்காட்டி புதிய தகவல்கல் வெளியாகின.
லடாக் கிழக்கு எல்லையில் மே மாதம் முதலே சீனா பெருமளவிலான ராணுவ வீரர்களையும் ஆயுத தளவாடங்களையும் குவித்து வருகிறது. இதன் உச்சமாகத்தான் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றது. அதை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
எதைப் பற்றியும் சட்டை செய்யாத சீனா.. லடாக் எல்லையில் ஃபைபர் கேபிள் அமைக்கிறது.. வெளியான திடுக் தகவல்
சேதம் குறித்து சீனா மவுனம்
இந்த ஊடுருவல் முயற்சியில் சீனாவுக்கு கடும் உயிரிழப்புகளும் சேதமும் ஏற்பட்டது. இதனால்தான் இந்த சேதம் குறித்து சீனா இதுவரை வாயே திறக்காமல் இருந்து வருகிறது. இதன்பின்னர் இருநாடுகளிடையே பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் சீனாவோ இடைவிடாமல் ஊடுருவலை மேற்கொள்ள முயல்கிறது.
மாஸ்கோவில் இந்திய அமைச்சர்கள்
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் சீனா வெளியுறவுத் துறை அமைச்சரும் செப்டம்பர் 10-ந் தேதி சந்தித்து பேசினர். முன்னதாக செப்டம்பர் 4-ந் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மாஸ்கோ மாநாட்டில் பங்கேற்றார்.
சீனா- இந்தியா ஒப்பந்தம்
இந்தியா- சீனா வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாஸ்கோ பேச்சுவார்த்தையில் 5 அம்சங்கள் கொண்ட புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு முதல்நாள் எல்லையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என தகவல்கள் வெளியாகின.
இருதரப்பு விளக்கம்
அப்போதுதான், சீனா வீரர்கள் ஊடுருவுவதற்காக துப்பாக்கிகள், நீண்ட கத்தி போன்ற கூரிய ஆயுதங்களுடன் எல்லையில் நிற்கும் படங்களை ராணுவ தரப்பு வெளியிட்டது. இருந்தபோதும் வழக்கம் போல சீனா இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை மறுத்தே வந்தது. மாறாக, இந்தியாதான் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தெரிவித்தது. நமது ராணுவமும், சீனாவின் நடவடிக்கைக்கு பதில் தரப்பட்டது என விளக்கம் அளித்திருந்தது.
100 முதல் 200 ரவுண்டு துப்பாக்கிச் சூடு
தற்போது, இந்தியா, சீனா ராணுவ வீரர்கள் மாஸ்கோ பேச்சுவார்த்தைக்கு முதல் நாள் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தினர் எனவும் இருதரப்பும் சுமார் 100 முதல் 200 ரவுண்டுகள் வரை சுட்டிருக்கலாம் எனவும் வெளியுறவுத் துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி சில ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.