சஞ்சீவி ஹனுமன் படத்துடன் மோடிக்கு நன்றி: பிரேசில் அதிபர் அசத்தல்
டெல்லி : கொரோனா தடுப்பு மருந்து அனுப்பிய இந்திய பிரதமர் மோடிக்கு, சஞ்சீவி ஹனுமன் படத்துடன் நன்றி தெரிவித்துள்ளார் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ.
பிரேசிலுக்கு 2 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது. தடுப்பு மருந்துகள் 2 விமானங்களில் பிரேசில் மற்றும் மொராக்கோவிற்கு மும்பையில் இருந்து நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளை வழங்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு போல்சனாரோ டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஹனுமான் 'சஞ்சிவி மலையை' தூக்கிக் கொண்டு, இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு கொண்டு வருவதை போன்ற படத்தை போட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், "வணக்கம், உலகளாவிய நெருக்கடி நிலையை சமாளிக்க பிரேசில் எடுக்கும் முயற்சிகளில் இந்திய பிரதமர் இணைந்து சிறந்த வகையில் உதவி செய்ததை பெருமையாக கருதுகிறேன். இந்தியாவில் இருந்து பிரேசிலுக்கு தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்து எங்களுக்கு உதவியதற்கு நன்றி" என்று போல்சனாரோ குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியும், சுகாதார நலனில் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என பதில் ட்வீட் செய்துள்ளார்.
- Namaskar, Primeiro Ministro @narendramodi
— Jair M. Bolsonaro (@jairbolsonaro) January 22, 2021
- O Brasil sente-se honrado em ter um grande parceiro para superar um obstáculo global. Obrigado por nos auxiliar com as exportações de vacinas da Índia para o Brasil.
- Dhanyavaad! धनयवाद pic.twitter.com/OalUTnB5p8
பிரேசில் மட்டுமின்றி பூட்டான், மாலத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இந்தியா தடுப்பு மருந்துகளை அனுப்பி உள்ளது.