உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தம்பிக்கு ஹைகோர்ட் நீதிபதி பதவி! கொலிஜியம் பரிந்துரையால் சர்ச்சை
டெல்லி: மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களில் ஒருவர், உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி அருண் மிஸ்ராவின் தம்பியாகும்.
நீதிபதிகள் தேர்வில், நீதிபதிகளின் உறவினர்களுக்கு, உச்சநீதிமன்ற கொலிஜியம் முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படும் விமர்சனத்திற்கு இது வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
மத்திய பிரதேச ஹைகோர்ட் நீதிபதியாக பதவி வழங்கப்பட்டுள்ள வழக்கறிஞர் விஷால் மிஸ்ரா என்பவர் உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ராவின் தம்பி என்ற தகவல் தற்போது ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டுக்கு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் 5 நீதிபதிகளை கொண்ட கொலிஜியத்தில் அருண் மிஸ்ராவும் ஒருவர். ஹைகோர்ட்டுகளுக்கு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் 3 நீதிபதிகளை கொண்டது. அந்த கொலிஜியம்தான், விஷால் மிஸ்ராவுக்கு நீதிபதி பதவி வழங்கியுள்ளது.
ஆளுநர், முதல்வர் ஏற்பு
உச்சநீதிமன்றத்தின் 3 மூத்த நீதிபதிகள் அடங்கிய இந்த கொலிஜியம் வெளியிட்டுள்ள தீர்மானத்தில், "மத்திய பிரதேச முதல்வர் மற்றும் ஆளுநர், எங்களது இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர்" என்று தெரிவித்து. இந்த கொலிஜியத்தில் உள்ள, 3 நீதிபதிகளில், எஸ்.ஏ.போப்டே மற்றும் ஏ.எம்.கன்வில்கர் ஆகிய, இருவர் ஏற்கனவே மத்திய பிரதேச ஹைகோர்ட்டில் தலைமை நீதிபதிகளாக பணியாற்றியவர்கள்.
விதிமுறை என்ன
உச்சநீதிமன்ற நீதிபதிகளான அருண் மிஸ்ரா, ஏ.எம்.சப்ரே, ஹேமந்த் குப்தா போன்றோர் மத்திய பிரதேச ஹைகோர்ட்டில் பணியாற்றிய நீதிபதிகள்தான். உறவினர்கள் ஆதிக்கம், நீதிபதிகள் நியமனத்தின்போது எதிரொலிப்பது குறித்து, சட்டத்துறை வல்லுநர் அர்க்யா சென்குப்தா கூறுகையில், "நீதிபதிகள் நியமனத்தில் என்ன விதிமுறை பின்பற்றப்படுகிறது? இது ஒரு நடைமுறையாக உள்ளது. டாப் 3 நீதிபதிகள் பரிந்துரையில் கையெழுத்திட்டால் அதற்கு எதிர்ப்பே இல்லை என்றார்.
மெரிட் தேர்வு
அதேநேரம், நீதிபதிகள் நியமனம் குறித்த கொலிஜியம் தீர்மானத்தில், "மெரிட் மற்றும் பொருத்தமானவர்கள் என்ற அடிப்படையில், ஹைகோர்ட் நீதிபதிகளாக இவர்களை நியமிக்க பரிந்துரைக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டு, செப்டம்பரில் விஷால் மிஸ்ரா பெயரை நீதிபதி பதவிக்கு மத்திய பிரதேச ஹைகோர்ட் கொலிஜியம் பரிந்துரைத்தது. ஹைகோர்ட் நீதிபதியாக குறைந்தபட்ச வயது வரம்பு 45. ஆனால் விஷால் மிஸ்ரா அந்த தகுதியை பூர்த்தி செய்யவில்லை. இதை மத்திய அரசும் சுட்டிக் காட்டியிருந்தது.
வயது விவகாரம்
தற்போது மத்திய பிரதே ஹைகோர்ட்டின் நீதிபதியாக விஷால் மிஸ்ரா பணி நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், "விஷால் மிஸ்ராவின், வயது விவகாரத்தை பொறுத்தளவில், ஹைகோர்ட் கொலிஜியம் கொடுத்த விளக்கத்தில், நாங்கள் முழு திருப்தியடைந்துள்ளோம்" என்று உச்சநீதிமன்ற கொலிஜியம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவர, தற்போதைய மத்திய அரசு, தேசிய நீதிபதி நியமன கமிட்டி என்ற அமைப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டது. ஆனால் உச்சநீதிமன்ற எதிர்ப்பால் அது முடியவில்லை.