வயசோ 75.. ரிசல்ட்டோ எப்படி வரும் தெரியாது.. இடியாப்ப சிக்கலில் எடியூரப்பா
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகளைப் பொறுத்து, கர்நாடகாவில் பாஜக தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் அரசியல் எதிர்காலம் தீர்மானிக்கப்பட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் உலா வருகின்றன.
கர்நாடக பாஜகவில் எடியூரப்பா அசைக்க முடியாத சக்தியாக உள்ளார். அம்மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு கொண்ட பாஜக தலைவர் அவர் மட்டுமே என்று கூறிவிட முடியும். ஆனால், இப்போது கர்நாடகாவில் எடியூரப்பாவைவிடவும் மோடிக்குத்தான் செல்வாக்கு அதிகம்.
மோடி அலையால்தான், கடந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இம்முறையும் எக்ஸிட் போல்கள் கர்நாடகாவில் பாஜக அதிக தொகுதிகளை வெல்லும் என்றே கூறுகின்றன. ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் எடியூரப்பா தலைமையில் பாஜக 104 தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்தது. மெஜாரிட்டிக்கு தேவையான 113 தொகுதிகளை கைப்பற்ற முடியாததால், காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியை அமைத்துவிட்டன.
மோசடி கணிப்புகளை புறந்தள்ளுவோம்.. வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம்- டிடிவி தினகரன்
கர்நாடக நிலை
கோவா போன்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை ஆட்சியமைக்கவிடாமல் தடுத்த தந்திரங்கள் கர்நாடகாவில் எடுபடவில்லை. இந்த நிலையில், 75 வயதுக்கு மேற்பட்டவர்களை அரசியலில் இருந்து ஓய்வு பெறச் செய்யும் திட்டத்தை பாஜக தேசிய தலவைர் அமித்ஷா முன்னெடுத்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் எடியூரப்பாவுக்கு 76 வயதாகப்போகிறது. எனவே, சில மாதங்களில் அவர் பதவி பறிக்கப்படும் என்ற செய்தி பரவி வருகிறது.
பதவிக்கு ஆபத்து
இதையறிந்துதான், தொண்டனாக கூட பணியாற்ற தயார் என கூறியுள்ளார் எடியூரப்பா. லோக்சபா தேர்தலில் பாஜக, கர்நாடகாவில், அதிக இடங்களில் வெற்றி பெற்றால் எடியூரப்பா பதவிக்கு தற்போதைக்கு ஆபத்து நேராது. ஏனெனில் ஆபரேஷன் கமலா மூலமாக காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியமைக்க எடியூரப்பா தீர்மானித்துள்ளார். அப்படி நிலை வந்தால் எடியூரப்பாவே முதல்வராவார். ஒருவேளை பாஜகவைவிட காங்கிரஸ்-மஜத கூட்டணி அதிக தொகுதிகளை வென்றுவிட்டால், அப்போது எடியூரப்பாவை நம்பி கட்சி தாவ ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் தயாராக இருக்க மாட்டார்கள். எனவே எடியூரப்பா பதவியை பறிக்க அமித்ஷாவுக்கு அதிக நேரம் ஆகாது.
புதிய தலைவர் யார்
கர்நாடக பாஜகவின் புதிய தலைவர் பதவி போட்டியில், முன்னாள் துணை முதல்வர், ஆர்.அசோக், முன்னாள் அமைச்சர்கள் சி.டி.ரவி, ஷோபா கரந்தலாஜே ஆகிய ஒக்கலிக ஜாதி பிரிவு தலைவர்கள் முன்னிலையில் உள்ளனர். தலித் சமூகத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளியும் போட்டியில் உள்ளார். ஆர்எஸ்எஸ் பிரமுகரான பி.எல்.சந்தோஷுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், எடியூரப்பா லிங்காயத்து ஜாதி பிரிவை சேர்ந்தவர் என்பது, அவரது பதவியை காப்பாற்றும் முக்கிய கவசமாக இருக்கப்போகிறது என்கிறார்கள். கர்நாடக மக்கள் தொகையில் லிங்காயத்துகள்தான் பெரும்பான்மை என்பது இதற்கு முக்கிய காரணம்.
தேர்தல் ரிசல்ட் முக்கியம்
இதனிடையே, எக்ஸிட் போல்கள் எப்போதுமே சரியாகவே இருக்கும் என்று சொல்லிவிட முடியாது என கூறியுள்ளாார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு. லோக்சபா தேர்தல்கள் நிறைவடைந்து நேற்று எக்ஸிட் போல்கள் வெளியாகின. பெரும்பாலான எக்ஸிட் போல்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சியை மீண்டும் பிடிக்கப்போகிறது என்று கூறியுள்ளன. இந்த நிலையில்தான், வெங்கையா நாயுடு ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இப்படி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த வெங்கையா நாயுடு தற்போது துணை குடியரசு தலைவர் பதவியை அலங்கரிப்பவர். அப்படிப்பட்ட ஒருவர் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. எனவே கர்நாடகாவில் எக்ஸிட் போல் பலிக்குமா இல்லை, கவிழ்க்குமா என்பதை திக் திக் இதயத்தோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார் எடியூரப்பா.