சுமார் 80 ஆயிரம் ஊழியர்களுக்கு கல்தா? விஆர்எஸ் கேட்போருக்கு பிஎஸ்என்எல் கவர்ச்சி அறிவிப்பு
டெல்லி: விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 50 வயதை கடந்த சுமார் 80 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப கவர்ச்சிகரமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியால் தள்ளாடி வருகிறது. இதனால் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நிதிச்சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருவாயின் பெரும் பகுதியை ஊழியர்களின் ஊதியத்துக்கு வழங்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதன் காரணமாக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 50 வயதை கடந்தவர்களை விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ப.சி. வெளிநாடு தப்பி செல்லமாட்டார்.. வேண்டுமானால் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க நாங்கள் ரெடி.. கபில் சிபல்
அரசு ஏற்கவில்லை
பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்கள் நிதிச்சிக்கலில் இருந்து மீண்டு வர 74000 கோடி ரூபாய் ஒதுக்குமாறு தொலைத்தொடர்புதுறை கோரியிருந்தது. ஆனால் இந்த கோரிக்கையை மத்திய நிதியமைச்சகம் ஏற்கவில்லை.
ஊதியம் வழங்க
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது ஒரு லட்சத்து 76 ஆயிரம் பேரும் எம்.டி.என்.எல் நிறுவனத்தில் 22 ஆயிரம் ஊழியர்களும் பணியாற்றுகிறார்கள். இவர்களுக்கு ஊதியத்தை சுயமாக போடும் அளவுக்கு நிதியிருப்பு சிறப்பாக இல்லை.
4ஜி சேவை
இந்த நிறுவனங்களின் கடன் தொகை ரூ.40 ஆயிரம் கோடி என்று சொல்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் மத்திய அரசு பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி சேவையை வழங்க ஒப்புதல் அளித்தது.அத்துடன் பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை இணைக்க முடிவு செய்துள்ளது.
7000 கோடி மிச்சம்
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 50 வயதை கடந்தவர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை சுமார் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் ஏற்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஊதிய பணம் சுமார் 7 ஆயிரம் கோடி மிச்சமாகும் என கூறப்படுகிறது.
பிஎஸ்என்எல் தலைவர்
இந்நிலையில் பிஎஸ்என்எல் தலைவர் பிகே. பர்வார் கூறுகையில், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ம்தேதி தொடங்கிய இந்த திட்டம் அடுத்த மாதம் 3ம் தேதி வரை இருக்கும். விருப்பம் உள்ளவர்கள் விஆர்எஸ் கோரி விண்ணப்பிக்கலாம் என்றார்.
கருணை தொகை
இந்த திட்டத்தின்படி விண்ணப்பிக்கும் ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 35 நாள் சம்பளம் என கணக்கிட்டு கருணைத் தொகை வழங்கப்படும். இதுதவிர ஓய்வு வயது வரை ஆண்டுக்கு 25 நாள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி அன்று 50 வயது பூர்த்தி அடையும் ஊழியர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஆர்எஸ் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்க 12 ஆயிரத்து 768 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.