பேச்சுவார்த்தை புரயோஜனமில்லை...வேளாண் சட்டத்தை ரத்து பண்ணுங்க... மாயாவதி கோரிக்கை!
டெல்லி: பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. வேளாண் சட்டங்களை ரத்து செய்து இந்த பிரச்சினையை விரைவில் தீர்த்து வையுங்கள் என்று மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 45 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
கடைசியாக அவர்களுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில்தான் முடிந்தது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது என பிடிவாதமாக உள்ளது. இந்த சட்டத்தை திரும்ப பெறாவிட்டால், போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதியும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட அவர் கூறியதாவது:-
டெல்லி எல்லையில் நீண்ட காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி அடைந்துள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் விஷயம். வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றனர். வேளாண் சட்டங்களை ரத்து செய்து இந்த பிரச்சினையை விரைவில் தீர்த்து வையுங்கள் என்று மாயாவதி கூறியுள்ளார்.