உடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்
Recommended Video
டெல்லி: அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை அதிகாரபூர்வமாக முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இவ்விரு கட்சிகளும், உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைத்தன. உத்தரபிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சி 38 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின. பாஜகவை தோற்கடித்தே தீர வேண்டும் என்பதே இக்கூட்டணி நோக்கம்.
ஆனால், தேர்தல் முடிவுகள், இக்கூட்டணியை மக்கள் ஏற்கவில்லை என்பதை உறுதி செய்தன. பாஜக, 62 இடங்களில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 10 இடங்கள், சமாஜ்வாதி கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
ஆலோசனை கூட்டம்
இதையடுத்து, இரு கட்சி தலைவர்கள் நடுவே விரிசல் அதிகரித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். யாதவர்கள் தனது வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை என்று மாயாவதி வெளிப்படையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் நடைபெற்று வரும், தேசிய மற்றும் மாநில அளவிலான பகுஜன் சமாஜ் கமிட்டிகளின், கூட்டத்திற்கு பின்னர் சமாஜ்வாதியுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தனித்து போட்டி
மாயாவதி இந்த தகவலை ட்விட்டரில் கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மாயாவதி, கூறுகையில், "இனி வரும் அனைத்துத் தேர்தல்களும், பெரியதோ சிறியதோ பகுஜன் சமாஜ் தனியாகவே போட்டியிடும்" என்று கூறியுள்ளார். தனது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்தும், அகிலேஷ் மீதும் விமர்சனங்களை வரிசையாக முன் வைத்துள்ளார் மாயாவதி.
தலித் விரோத அரசு
"மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் சமாஜ்வாதி கட்சி தலைமையின் அணுகுமுறை, எதிர்காலத்தில் பாஜகவை தோற்கடிக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. கட்சி நலனுக்காக, பகுஜன் சமாஜ் கட்சி எதிர்காலத்தில் தனித்தே தேர்தல்களை சந்திக்கும் " என்று மாயாவதி ட்வீட் செய்துள்ளார். சமாஜ்வாதி கட்சி, உத்தரபிரதேசத்தில் 2012-17ல் தனது ஆட்சி காலத்தில், பல தலித் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது, ஆனால் பகுஜன் சமாஜ் கட்சி தேசத்தின் நலனுக்காக சமாஜ்வாதியுடன் கைகோர்க்க முடிவு செய்தது. சமாஜ்வாதி அரசு தலித் விரோதமானது, இடஒதுக்கீடு மற்றும் பதவி உயர்வுகளில் தலித்துகளுக்கு சிக்கல்களை உருவாக்கியது, மேலும் சட்டம் ஒழுங்கு நிலைமை மாநிலத்தில் மோசமடைந்தது. ஆனால், தேசிய நலனுக்காக கூட்டணிக்கு பகுஜன் சமாஜ் ஒப்புக்கொண்டது "என்று மாயாவதி மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
முஸ்லீம்களுக்கு எதிரானது
மாயாவதி யாதவ் குடும்பத்தினரையும் தாக்க தயங்கவில்லை. சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ், பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார். தாஜ் காரிடார் வழக்கில் என்னை சிக்க வைக்கவே இந்த சதி திட்டம். அகிலேஷ் யாதவை, வாக்கு எண்ணும் நாளில் போனில் நான் அழைத்தேன். ஆனால் அவர் எனது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ் யாதவ் எனவும் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.