காங்கிரஸ் என்ன செய்து விட்டது?.. இருந்தாலும் ஆதரிக்கிறோம்.. மாயாவதி பரபரப்பு விளக்கம்
Recommended Video
டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில் பாஜக எங்கு சோபிக்க முடியவில்லை. ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. தெலுங்கானாவில் டிஆர்எஸ் கட்சியும் , மிசோரமில் மாநில கட்சியும் ஆட்சி அமைக்கவுள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதாவது அக்கட்சி 114 இடங்களிலும் பாஜக 109 இடங்களிலும் சுயேச்சைகள் 4 இடங்களிலும் இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
2 உறுப்பினர்கள்
பெரும்பான்மைக்கு காங்கிரஸுக்கு 116 தேவைப்படுகிறது. இதனால் காங்கிரஸுக்கு இன்னும் இரு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்கலாம். இந்நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள் உள்ளனர்.
காரணம்
எனவே எங்கள் கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸுக்கு ஆதரவு தருவர் என மாயாவதி தெரிவித்துள்ளார். எப்போதும் காங்கிரஸ் கட்சியையும் சேர்த்து விமர்சிக்கும் மாயாவதி தற்போதைய திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என அவராகவே விளக்கம் அளித்துள்ளார்.
நேசக்கரம்
அவர் கூறுகையில் கடந்த பல ஆண்டுகளில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்துள்ளது. ஆனால் அக்கட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டதில்லை. இதனால் மாநில கட்சியின் தலைவர்கள் வெளியே வந்து புதிய கட்சிகளை தொடங்கி மக்களுக்கு நேசக்கரம் நீட்டுகின்றனர்.
உறுதியாக உள்ளோம்
காங்கிரஸ் கட்சி சரியாக இருந்தால் அங்கு பாஜகவுக்கோ அல்லது மற்ற கட்சிகளுக்கோ வேலை இல்லை. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
ஆதரவு தர முடியும்
எங்கள் கட்சி தேர்தல் பணிகளை ஒழுங்காக செய்திருந்தாலும் நாங்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எது எப்படியோ எங்கள் இலக்கு பாஜகவை விரட்டுவதுதான். அதனால் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர முடிவு செய்தோம் என்றார்.
ஆட்சி செய்ய முடியாது
தற்போது பிஎஸ்பியும் ஆதரித்தால் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான 116 எண்ணிக்கையை அடையும். சமாஜ்வாதி கட்சியும் ஆதரித்தால் அந்த எண்ணிக்கை 117 ஆகும். இதனிடையே அந்த மாநிலத்தில் 4 சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவை கமல்நாத் கோரி வருகிறார். எனவே பாஜக தலைகீழாக தண்ணீர் குடித்தாலும் ம.பி.யில் ஆட்சி செய்ய முடியாது.